யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாடல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) ஒருதலைப்பட்சமாகப் பயன்படுத்தப்படுவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் இரட்டை நிலைப்பாடு மீண்டும் வெளிப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் ராப் கலைஞர் ஒருவர், தனது பாடலில் விடுதலைப் புலிகள் தொடர்பான உள்ளடக்கத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
தனது ‘எக்ஸ்’ (X) சமூக வலைத்தளப் பதிவில் கருத்து வெளியிட்டுள்ள நாமல் ராஜபக்ச, இசை மற்றும் கலை வெளிப்பாடுகள் தற்போது பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களாக கருதப்படுகின்றன என்றால், சமீபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார காலத்தில் சில தேசிய மக்கள் சக்தி (NPP) அரசியல்வாதிகள் விடுதலைப் புலிகள் தொடர்பான பாடல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பகிர்ந்தபோது ஏன் அதே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல் ஆதாயத்திற்காக இத்தகைய பாடல்களை வெளிப்படையாகப் பகிர்ந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“அப்போது பொலிஸார் எங்கே இருந்தனர்? அப்போது பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் எங்கே இருந்தது?” என நாமல் ராஜபக்ச தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே தொடர்ந்தும் கருதப்படுவதாகவும், அந்த அமைப்பின் கொள்கைகள் அல்லது கூறுகளை ஊக்குவிப்பதையோ மகிமைப்படுத்துவதையோ தாம் ஆதரிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் இரு தரப்பினரிடமும் சட்டம் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஒரு புறம் அரசாங்கத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினருக்கு அரசியல் பாதுகாப்பு வழங்கப்பட்டு, மறுபுறம் ஒரு சாதாரண இளைஞர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது நீதியற்ற செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல்வாதிகளுக்கு ஒரு விதமான சட்டமும், சாதாரண மக்களுக்கு மற்றொரு விதமான சட்டமும் நடைமுறையில் இருப்பது ஜனநாயக சமூகத்திற்கு ஏற்றதல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய செயல்கள் சட்டவிரோதமானவை என்று அரசாங்கம் கருதினால், அரசியல் சார்பு, பதவி அல்லது செல்வாக்கு என்பவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைவருக்கும் ஒரே விதமாக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இல்லையெனில், இந்தக் கைது நடவடிக்கை சட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்படும் ஒருதலைப்பட்சமான அதிகார துஷ்பிரயோகமாகவே பார்க்கப்படும் என நாமல் ராஜபக்ச தனது பதிவில் தெரிவித்துள்ளார்.