கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை (12) நீர்கொழும்பு களப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் இயங்கும் ‘இலங்கை கடற்படைக் கப்பல் களனி’ நிறுவனத்தினால் இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது களப்புப் பகுதியில் பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனையிட்டபோது, 30 உரப்பைகளில் அடைக்கப்பட்டிருந்த பீடி இலைகள் கண்டெடுக்கப்பட்டன.
941 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகள் மற்றும் ஒரு டிங்கி படகு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 42 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.