இலங்கை மற்றும் வியட்நாம் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை – வியட்நாம் வர்த்தக, முதலீடு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு மன்றம்’ நேற்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வியட்நாம் வர்த்தக மற்றும் தொழில்துறை சபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றால் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மன்றம், வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாமின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கு இணையாக, அவரினதும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவினதும் பங்கேற்புடன் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டதுடன், பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பும் இங்கு பிரதிபலித்தது.
வர்த்தக விரிவாக்கம், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு ஆகிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்த மன்றத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக புதிய வழிகளை ஆராயவும், வர்த்தகங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தவும் மற்றும் சந்தை அணுகுமுறையை எளிதாக்கவும் இரு நாடுகளையும் சேர்ந்த சிரேஷ்ட அரச அதிகாரிகள், தொழில்முயற்சியார்கள் மற்றும் தொழிலதிபர்களை ஒரே மேடைக்கு கொண்டு வருவதற்கு இது வாய்ப்பளித்தது.
இந்த மன்றத்தின் போது, கொழும்பு மற்றும் ஹோ சி மின் நகருக்கு இடையிலான நேரடி விமான சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வியட்நாம் ஏர்லைன்ஸ் மற்றும் வியட்ஜெட் எயார் மூலம் இயக்கப்படும் இந்த சேவையானது, இரு நாடுகளுக்கும் மற்றும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.
இந்த மன்றத்தில், முக்கிய ஒத்துழைப்புத் துறைகளை உள்ளடக்கிய ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. அத்துடன், இலங்கை வர்த்தக சபையின் கீழ் இலங்கை – வியட்நாம் வர்த்தக சம்மேளனம் நிறுவப்பட்டமை இங்கு இடம்பெற்ற ஒரு சிறப்பம்சமாகும்.
இந்த மன்றத்திற்கு இணையாக, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் வர்த்தக வலையமைப்பு அமர்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் மூலம் இலங்கை மற்றும் வியட்நாம் வர்த்தகர்களுக்கு இடையில் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இரு நாடுகளினதும் தனியார் துறையினரிடமிருந்து இதற்குச் சிறந்த வரவேற்பு கிடைத்ததோடு, வர்த்தகத்தை விரிவுபடுத்துதல் மற்றும் நிலையான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவது குறித்து வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.