இந்த மாற்றங்கள் அகதி அந்தஸ்து கோருபவர்கள் மற்றும் குடும்ப மறுசீரமைப்பு விண்ணப்பங்களைப் பாதிக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிட ஒப்பந்தத்தின் (European Pact on Migration and Asylum) காரணமாக, ஜூன் 12, 2026 முதல் நெதர்லாந்தில் புதிய புகலிட விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த மாற்றங்கள் அகதி அந்தஸ்து கோருபவர்கள் மற்றும் குடும்ப மறுசீரமைப்பு விண்ணப்பங்களைப் பாதிக்கும்.
இந்த புதிய சட்ட மாற்றங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
புதிய விதிகளின்படி, புகலிட விண்ணப்பங்கள் மீது பொதுவாக 6 மாதங்களுக்குள் முடிவு அறிவிக்கப்படும்.
பாதுகாப்பான நாடுகளிலிருந்து வருபவர்களுக்கான விரைவான நடைமுறையில் (accelerated procedure), இந்த கால அவகாசம் 3 மாதங்களாக இருக்கும்.
வதிவிட உரிமத்தில் மாற்றங்கள்:
ஜூன் 12, 2026 முதல் விண்ணப்பிப்பவர்களுக்கு இனி நிரந்தர புகலிட வதிவிட உரிமம் (Permanent asylum residence permit) வழங்கப்படாது.
இருப்பினும், ஏற்கெனவே ஜூன் 12க்கு முன் நிரந்தர உரிமம் பெற்றவர்கள் அதைத் தொடர்ந்து வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
புதிய புகலிட வதிவிட அட்டைகள் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு விண்ணப்பதாரர்கள் புதுப்பிக்க வேண்டியிருக்கும்.
நெதர்லாந்தில் 5 ஆண்டுகள் தங்கியிருப்பவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீண்டகால வதிவிட உரிமத்திற்கு (long-term EU residents) தகுதி பெற வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே விண்ணப்பித்தவர்களின் நிலை:
ஜூன் 12, 2026க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு பழைய விதிகளே பொருந்தும்.
புதிய நடைமுறைக்காக குடிவரவு மற்றும் குடியுரிமை சேவை (IND) அதிக பணியாளர்களை ஈடுபடுத்துவதால், பழைய விண்ணப்பங்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரிக்கக்கூடும்.
ஒக்டோபர் 1, 2026 முதல், ஒரே பின்னணி அல்லது ஒரே நாட்டைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங்களை ஒன்றாகப் பரிசீலிப்பதன் மூலம் விரைவாக முடிவெடுக்க IND திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பழைய விண்ணப்பங்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் தீர்வு காண இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர் இன்றி வரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் விண்ணப்பங்களுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படும்.
குடும்ப மறுசீரமைப்பு:
குடும்ப மறுசீரமைப்பு தொடர்பான விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த கூடுதல் தகவல்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்கப்படும்.
பழைய விண்ணப்பத்தை ரத்து செய்துவிட்டு, புதிய விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும், முந்தைய விண்ணப்பத் தேதியே முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் IND தெளிவுபடுத்தியுள்ளது.
