ஆப்கானிஸ்தானுக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்த வெற்றியில் அறிமுக வீரர் மானவ் சுதர் மிகச்சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தினார். நியூ சண்டிகர் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகளைத் தட்டிச் சென்ற சுதர், இந்திய அணியின் இன்னிங்ஸ் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அறிமுகத்தை நிகழ்த்திய சுதர், முதல் இன்னிங்ஸில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மிரட்டினார். சுதரின் சுழலில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 36 ஓவர்களில் 112 ரன்களுக்குள் ஆட்டமிழக்க, இந்தியா தனது மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்தது.

தனது பந்துவீச்சு நுணுக்கங்கள் குறித்துப் பேசிய சுதர், "ஆடுகளத்தின் தன்மை மற்றும் வேகத்தைப் புரிந்துகொள்வதற்கே ஆரம்பத்தில் முக்கியத்துவம் அளித்தேன். விக்கெட் சற்று மெதுவாக இருந்ததால், அதற்கேற்ப மாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, அடிப்படைப் பந்துவீச்சையே (stock delivery) அதிகம் பயன்படுத்தினேன்," என்று குறிப்பிட்டார். பந்தின் வேகத்தை மாற்றுவதற்கு முன்பு ஆடுகளத்தை நன்கு புரிந்து கொண்டதே தனது திட்டமாக இருந்ததாக அவர் மேலும் கூறினார்.
"எனது அணியின் நம்பிக்கையைப் பெற்று, புதிய பந்தை வீசுவது ஒரு பெருமையான தருணம். டெஸ்ட் கிரிக்கெட்டில் நேர்த்தியும் பொறுமையுமே மிக முக்கியம். ஒரே பகுதியில் பந்துகளைத் தொடர்ந்து வீசுவது எப்படி என்பதை நான் கற்றுக் கொண்டேன். இதுவே எனது வெற்றிக்கு உதவியது. டெஸ்ட் வடிவம் அமைதியையும், திட்டமிடலில் பிடிப்பையும் கோருகிறது என்பதை உணர்ந்தேன்."
IND vs AFG: இந்தியாவிடமிருந்து நிறைய பாடம் கற்றோம்.. அனுபவம் இல்லாததால் தோல்வி.. ஆப்கான் கேப்டன்
ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுதர், இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்த ஒரு பெரிய கவுரவம் என்று குறிப்பிட்டார். ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த இந்த இளம் சுழற்பந்து வீச்சாளர், தனது அறிமுகப் போட்டியிலேயே முத்திரை பதித்தது இந்திய அணியின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமை எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து, தனது முதல் வாய்ப்பை கனவுத் தொடக்கமாக அவர் மாற்றியுள்ளார்.