லண்டன்: இரவு விடுதி விவகாரத்தில் சிக்கியதால் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 'பிளேயிங் லெவனில்’ இடத்தை இழந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், மீண்டும் தொழில்முறை கிரிக்கெட்டுக்குத் திரும்ப உள்ளார். ஜூன் 19 அன்று செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் தொடங்கவுள்ள நார்தாம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டிக்கான டர்ஹாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
லண்டன் இரவு விடுதி சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதால், ஓவல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஸ்டோக்ஸ் சேர்க்கப்படவில்லை. லார்ட்ஸ் போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பிறகு, இங்கிலாந்து அணியின் நள்ளிரவு விதிமுறைகளை மீறியதன் காரணமாக, அவரது சக வீரரான வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சனுடன் பென் ஸ்டோக்ஸும் இரண்டாவது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார்.

சரசென்ஸ் ரக்பி வீரர் டோட்டோவா அவ்வாவுடன் (Totoa Auvaa) இரவு விடுதி மோதலில் இவர்கள் இருவரும் சிக்கியிருந்தனர். அங்கு ஏற்பட்ட மோதலின் போது அவ்வா குத்தியதில், ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சனுடன் இருந்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) பாதுகாப்பு அதிகாரி காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸின் எதிர்காலம் மற்றும் அணியில் அவரது இடம் குறித்து நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நிலையில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் இயக்குனர் ராப் கீ மற்றும் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகியோர் இன்னும் தெளிவான விளக்கங்களை அளிக்கவில்லை. ஸ்டோக்ஸ் இல்லாத நிலையில், ஓவல் டெஸ்டில் ஜோ ரூட் இங்கிலாந்து அணியை வழிநடத்தினார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஸ்டோக்ஸ் விளையாடாததால், ஜோ ரூட் தற்காலிகமாக கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
IND vs AFG: இரட்டை சதம் அடிக்க வேண்டும் என்று இலக்கு வைத்தேன்.. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த வியாழக்கிழமை டிரெண்ட் பிரிட்ஜில் தொடங்குகிறது. இந்த இறுதிப் போட்டியில் விளையாட ஸ்டோக்ஸ் மற்றும் அட்கின்சன் ஆகிய இருவரும் அணியில் தேர்வு செய்யப்படுவார்களா என்பது குறித்தான முடிவு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.