8 இலட்சம் ரூபா பெறுமதியான 2 வலம்புரி சங்குகளுடன் ஒருவர் கைது !

by admin

08 இலட்சத்துக்கு விற்பனை செய்ய முற்பட்ட 2 வலம்புரி சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலம்புரி சங்குகள் ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக புத்தளம் மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வேளை, புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (04) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரக்காப்பொலையிலிருந்து இணையத்தில் (‍pickme) வாகனத்தை முன்பதிவு செய்து வருமாறும் முச்சக்கரவண்டிக்கு தான் பணம் செலுத்துவதாகவும் கூறி வரவழைக்கப்பட்டபோதே அந்த நபர் வலம்புரி சங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமானவர் என்றும் அவர் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிபவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு வலம்புரிகளும் தலா 88, 99 கிராம் எடை கொண்டவை எனவும், சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரி சங்குகளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்