உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்தக் காணிகளை விடுவிக்கும் முகமாக உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு, காணி விடுவிப்பு தொடர்பில் கள ஆய்வுகளையும் மேற்கொண்டோம்.
இதில் உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை விடுவிப்பதற்கான முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
அதேவேளை, உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரதான வீதிகளின் சில பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை விடுவித்து, முழுமையாக வீதிகளைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உடனடியாக விடுவிக்க முடியாத நிலையில் காணப்படும் காணிகள் குறித்து மேலும் ஆராயப்பட்டு, எதிர்காலத்தில் விடுவிக்கக்கூடிய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம். அவ்வாறு விடுவிக்க முடியாத காணிகள் தொடர்பில் காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அது குறித்துத் தீர்மானிக்கவுள்ளோம்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. அந்தக் காணிகளை வழங்குவது குறித்து எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளோம்.
அதேபோல், விவசாயக் காணிகளை விடுவிப்பது தொடர்பில் விவசாயத் திணைக்கள அதிகாரிகளிடம் விவரங்களைக் கோரியுள்ளோம். அந்தத் தரவுகள் கிடைத்ததும் அக்காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
-யாழ். நிருபர் பிரதீபன்-