பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று புதன்கிழமை (13) சந்தித்து கலந்துரையாடினார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்த பிரதி அமைச்சர், அவர்களது நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததோடு சேதமாக்கப்பட்ட வீட்டின் சூழலையும் பார்வையிட்டார்.
குறித்த தோட்டம் தனியார் உரிமையாளர் ஒருவரினால் நிர்வகிக்கப்படுகிறது என்பதை அறிந்துகொண்டதோடு, பாதிக்கப்பட்ட நபர் தனியார் காணியில் வீட்டினை கட்டியதால் அவ்வீடு உடைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர், இதுபோன்ற நிலைமைகள் பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பாக மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக காலம் காலமாக காணப்பட்டு வருகிறது என்பதையும், இப்போது மட்டுமே சமூக வலைத்தளங்களின் ஊடாக மக்கள்மயப்படுத்தப்படுகிறது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
காலம் காலமாக எமது மக்கள் தற்காலிக வாழ்விடங்களை அமைப்பதற்கும், மரக்கன்றுகளை நடுவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும், தமக்கு தேவையான வாழ்வாதார பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி அற்றவர்களாக, தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு உட்படுபவர்களாக காணப்படுகின்றனர். இந்நிலைமைகளிலிருந்து நீங்கி முறையான தீர்வுகள் கிடைக்காமலேயே பல இன்னல்களுக்கு ஆளாவதையும் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே இவர்களுக்கு தற்போதைய சரியான தீர்வு 10 பேர்ச் காணியை வழங்கி அவர்களுக்கான வாழ்விடத்தை அமைப்பதே என தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்கான விரைவான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் என்பதனை உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பாக உரிய தோட்ட உரிமையாளருடன் கலந்துரையாடிய பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு சரியான நிவாரணம் கிடைப்பது உறுதி செய்யப்படும் என பொதுமக்களுக்கு பிரதி அமைச்சர் தெரிவித்தார்.






