பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்குள் நுழைவதற்கு முயற்சித்தது சட்டவிரோத செயற்பாடு என்றால் நீதி அமைச்சின் கீழ் பொறுப்பாக்கப்பட்டுள்ள மல்வானை இல்லம் மற்றும் காணிக்குள் அத்துமீறி நுழைந்து இல்லத்தை ஆக்கிரமித்த புதிய அனைத்து மாணவர் ஒன்றியத்தினருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
சட்டத்தின் முன் அனைவரும் சமம், சட்டத்தில் எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் தேசிய மக்கள் சக்தியினருக்கும், மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்களுக்கு மாத்திரம் கடுமையாக செயற்படுத்தப்படுகிறது.