ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக சபை முன்னெடுத்து வரும் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் பங்குதாரர்கள் பாரியளவிலான கண்டனப் போராட்டத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி முன்னேடுக்க தீர்மானித்துள்ளதாக டெலிகோம் பங்குதாரர்கள் ஒன்றியம் தொழிற்சங்க தலைவர் ஜி.அநுர பெரேரேரா தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 35 வருடங்களாக நேரடியாக நடத்தப்பட்டு வந்த பங்குதாரர்களின் பொதுக் கூட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி ஒன்லைன் ஊடாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி திறைசேரி மற்றும் பங்குச் சந்தை அதிகாரிகளுக்கு கடிதங்கள் மூலம் அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்விதப் பதிலும் கிடைக்கவில்லை. மேலும் 70 வயதை கடந்த எவரும் நிர்வாகச் சபையில் பதவி வகிக்க முடியாது. இருப்பினும் தற்போதைய நிர்வாக சபை 70 சயதை கடந்த நபர்களை பதவியில் அமர்த்த முயற்சிகளை மேற்கொள்கிறது. கடந்த முறையும் இவ்வாறான சூழல் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அதனை தடுத்தபோதிலும் அந்த நபர் டெலிகொம் நிறுவனத்தின் துணை நிறுவனமொன்றில் அமர்த்தப்பட்டார்.
அதேவேளை நிறுவனத்தின் இலாபத்தில் 30 சதவீதத்தை பங்குதாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் பின்பற்றப்படுவதில்லை. நிர்வாக சபைக்கு விருப்பமான முறையில் இலாபத்தை கணக்கிட்டு டொலர் கையிருப்பு அதிகரிப்பை காட்டி இலாபம் ஈட்டியதாக போலியான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
கடந்த காலங்களில் இவ்வாறான மக்கள் பிரச்சினைகளில் தமக்கு ஆதரவாக நின்ற மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் இவ்வாறாதொரு நிலை ஏற்படும் என்று தாம் எதிர்பார்க்கவில்லை. 10 இலட்சத்துக்கும் அதிகமாக வாடிகையாளர்கள் மற்றும் ஊழியர்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக தலையிட வேண்டும். இல்லாவிடின் தற்போதைய நிர்வாக சபை முன்னெடுத்து வரும் தன்னிச்சையான தீர்மானங்கள் மற்றும் மோசடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் பங்குதாரர்கள் பாரியளவிலான கண்டனப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.