ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கையை அடுத்து, துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு வெள்ளிக்கிழமை (22) அதிகாலை நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட, குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 21 சந்தேக நபர்கள் குறித்து இலங்கை பொலிஸார் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இலங்கை அதிகாரிகளால் நீண்ட காலமாகத் தேடப்பட்டு வந்த பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களான “மகாவத்தே சாமர” மற்றும் “வனாத்தே குடு துமிந்த” ஆகியோரும் இந்த சந்தேக நபர்களுள் அடங்குவர்.
துபாயில் நடைபெற்ற ஆடம்பர விருந்தொன்றின்போதே இவர்களை ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் படையினர் கைது செய்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் தகவல்படி, கடந்த 2025 ஒகஸ்ட் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்த கொடூர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியாக “குடு துமிந்த” செயற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அவர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்களில் குடு துமிந்தவின் நெருங்கிய சகாக்கள் ஐவரும் புலனாய்வாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நிலுவையில் உள்ள பல குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக “மகாவத்தே சாமர” மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
எஞ்சிய சந்தேக நபர்களில் பெரும்பாலானோர், துபாயை இலக்கு வைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைக் காணொளியாக பதிவு செய்து, அதனை சமூக ஊடகத் தளங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் துபாய் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாடு கடத்தப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட அனைத்துப் பெறுமதிமிக்க பொருட்களையும் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் கடவுச்சீட்டுகளுடன் மட்டுமே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இக்குழுவில் இரு பெண்களும் அடங்குவதுடன், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் அந்தந்த உள்ளூர் பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.