இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
டெலிகிராம், வட்ஸ்அப் போன்ற கணக்குகள் மற்றும் ஏனைய சமூக ஊடகப் பின்னணிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து தினசரி முறைப்பாடுகள் பதிவாகி வருகின்றன.
கடந்த காலங்களில் இலங்கையில் தங்கியிருந்து இவ்வாறான இணைய மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டவர்கள் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியுடன், கணினிகள் அல்லது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தி, தனிப்பட்ட தரவுகளைத் திருடுதல், வங்கிக் கணக்குகளை ஹேக் செய்தல், சமூக ஊடகக் கணக்குகளைக் கைப்பற்றுதல் மற்றும் போலி இணையத்தளங்களை உருவாக்கி பண மோசடி செய்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் தற்போது அதிகரித்துள்ளன.
மோசடிக்காரர்கள், பெரும் தொகை லொத்தர் பரிசுகள் விழுந்துள்ளதாகக் கூறி ஏமாற்றுதல், மிக எளிதாக உடனடிக் கடன்களை வழங்குவதாகக் கூறி ஆசை காட்டுதல், பகுதிநேர அல்லது ஒன்லைன் வேலைகளை வழங்குவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேலை மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளை பெற்றுத்தருவதாகக் கூறி பெரும் தொகை பணத்தை மோசடி செய்தல் போன்ற உத்திகளை பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான ஏமாற்று வேலைகளுக்குப் பொதுமக்கள் பலியாவதற்கு, இணைய பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பலவீனமான கடவுச்சொற்களைப் பயன்படுத்துதல், அறிமுகம் இல்லாத இணைப்புக்களை கிளிக் செய்தல் மற்றும் போலிச் செய்திகளை நம்புதல் ஆகியவையே முக்கிய காரணங்களாகும் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அல்லது உயர் கல்விக்கான முயற்சிகளின்போது, அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் போன்ற பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் மட்டுமே சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் பின்பற்றவேண்டிய முக்கிய அறிவுறுத்தல்கள் சிலவற்றை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிக வருமானம் தருவதாகக் கூறி செய்யும் மோசடியான தூண்டுதல்களுக்கு ஆளாகவேண்டாம்.
அடையாளம் தெரியாத நபர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைய இணைப்புக்களை கிளிக் செய்வதையோ அல்லது கியூ.ஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதையோ தவிர்க்கவும்.
இணையவெளியில் அறிமுகமில்லாத நபர்களின் கணக்குகளுக்குப் பணம் அனுப்புவதையோ, அவர்களுடன் வங்கி விபரங்களைப் பகிர்வதையோ அல்லது உங்கள் வங்கிக் கணக்குகளைப் பிறர் பயன்படுத்த அனுமதிப்பதையோ முற்றாகத் தவிர்க்கவும்.
உங்கள் தனிப்பட்ட விபரங்கள், கணக்கு இலக்கங்கள், கடவுச்சொற்கள் அல்லது கியூ.ஆர் குறியீடுகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநபர்களுடன் பகிரவேண்டாம்.
அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் தொலைபேசி செயலிகளை நிறுவும் போது பாதுகாப்பு முறைகள் குறித்து அவதானமாக இருங்கள். அத்துடன், உங்கள் தொலைபேசியின் அணுகல் அனுமதிகளை பிறருக்கு வழங்க வேண்டாம்.
இவ்வாறான நிதி மோசடிகளில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்ய நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு நேர்ந்த அல்லது தெரிந்த இவ்வாறான மோசடிகள் குறித்து பொலிஸாருக்குத் தெரிவிக்க முடியும்.
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (மேற்பார்வை அதிகாரிகள்): 071 – 8592918 / 071 – 8591765
கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (அலுவலகம்) : 011 – 2300756
இது தவிர, கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேரில் சென்றும் பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக முறைப்பாடு அளிக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.