யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதிய
யாழ்ப்பாணத்தில் தமது கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் என்ற 17 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளான். யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை வீதியில் அல்லைப்பிட்டி சந்தியில் உள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை வேளை அவ்வீதியூடாக சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றினை வழிமறித்துள்ளனர். குறித்த வாகனம் பொலிசாரின் கட்டளையை மீறி பயணித்த போது , வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனை அடுத்து வாகனம் நிறுத்தப்பட்ட போது , வாகனத்தினுள் இருந்த சிறுவன் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளான். அவனை உடனடியாக மீட்டு , பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்த போதிலும் , சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். அதேவேளை வாகனத்தினுள் இருந்த மேலும் இருவரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அவர்களில் ஒருவர் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , அவர்கள் என்ன நோக்கத்திற்காக அதிகாலை வேளை ஊர்காவற்துறை நோக்கி பயணித்தார்கள் என்பது தொடர்பில் அவர்களுக்கு குற்ற பின்னணிகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.