பிர்மிங்ஹாம்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் தொடங்குகிறது. இதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக, இரு நாட்டு ரசிகர்கள் மத்தியில் நிலவும் கடுமையான நெருக்கடி குறித்து இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மனம் திறந்துள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான எதிர்பார்ப்பு குறித்து ஜியோஸ்டார் நிகழ்ச்சியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசுகையில், "நான் வசிக்கும் கட்டிடத்தின் காவலாளி கூட என்னிடம் வந்து, நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் தோற்றுப் போங்கள், ஆனால் பாகிஸ்தானிடம் மட்டும் தோற்று விடாதீர்கள் என்று கூறுவார். மக்கள் கிரிக்கெட்டை எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதையும், இந்த இரு நாடுகளுக்கு இடையிலான போட்டிக்கு அவர்கள் தரும் முக்கியத்துவத்தையும் இதன் மூலம் உணர முடிகிறது" என்றார்.
மேலும் தனது முதல் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அனுபவத்தை பகிர்ந்த ஜெமிமா, "எனது முதல் பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக, டிரெஸ்ஸிங் ரூமில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் எங்களிடம் பேசினார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு வெளியில் எப்போதும் கடுமையான நெருக்கடி இருக்கும் என்பதை நாம் மறுக்க முடியாது. ரசிகர்கள் நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும் என்று கூறி எங்களை அவர் உற்சாகப்படுத்தினார்" எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தான் போட்டிக்கு அதிக அழுத்தம் இருந்தாலும், தங்களின் முக்கிய குறிக்கோள் உலகக் கோப்பையை வெல்வது மட்டுமே என்று ஜெமிமா கூறினார். "கோப்பையை ஏந்துவது தான் எங்கள் கனவு. தினமும் காலையில் நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, கோப்பையை வெல்வது போல கற்பனை செய்து பார்க்கிறோம். ஏதேனும் ஒன்றை நாம் தொடர்ந்து ஆழமாக சிந்திக்கும்போது, அதை நோக்கி நம் பயணம் தொடங்கும் என நம்புகிறோம். கடந்த 2025 உலகக் கோப்பையின் போதும் இதைச் செய்தோம். பயிற்சியாளர் அமோல் முஜும்தார் இந்த ஆக்கப்பூர்வமான பயிற்சியை வழக்கமாக்கியுள்ளார்" என்று ஜெமிமா கூறினார்.
நெருக்கடிகளை கையாள்வது குறித்து பேசிய அவர், "பயிற்சி ஆட்டங்களின் போது சில கடினமான சூழ்நிலைகளை உருவாக்கி, அதில் இருந்து எவ்வாறு மீள்வது என்று பயிற்சி மேற்கொள்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சமீபத்திய தொடர் எங்களுக்குச் சரியாக அமையவில்லை என்றாலும், வெற்றியை விட தோல்விகள் தான் நமக்கு அதிகமாக கற்றுத் தருகின்றன. அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தற்போது முழு தன்னம்பிக்கையுடன் உலகக் கோப்பை தொடரை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்" என்றார்.
ரோஹித் சர்மா ஓய்வு பெற்றுவிடுவார்.. அடுத்து வரப்போவது இவர்தான்.. இந்திய ஓப்பனர் பற்றி சேவாக் கணிப்பு
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அமோல் முஜும்தார் கூறுகையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாத்திமா சனா போன்ற குறிப்பிட்ட ஒரு தனிநபரின் விக்கெட்டை மட்டுமே குறிவைத்து விளையாடுவதைத் தவிர்க்க வேண்டும் என வீரர்களை அறிவுறுத்தியுள்ளார். "டி20 கிரிக்கெட் என்பது மிகவும் குறுகிய வடிவம். எந்தவொரு பந்துவீச்சாளரும் எந்த நேரத்திலும் சவாலாக மாறலாம். ஆட்டத்தில் சூழ்நிலைகள் மிக வேகமாக மாறும். எனவே வீரர்கள் பதற்றமின்றி, அமைதியாக இருந்து திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினால் போதும்" என்று கூறினார்.