மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா – ஈரான் ஏப்ரல் 8 அன்று தற்காலிக போர்நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், பல வாரங்களாக அமைதி பேச்சுவார்த்தை நீடித்து வருகின்றது. ஆனால், அது இன்னும் உறுதிசெய்யப்படாமலே உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் விரைவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனக் கூறி வந்த நிலையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதுபற்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தனது சமூக வலைதளப் பதிவில், “முன்னெப்போதையும் விட அமைதி பேச்சுவார்த்தையில் ஒரு முடிவை எட்டவிருக்கிறோம். இறுதி முடிவு 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து,
உடனடியாக அமைதி ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடுப்பட்டு, தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை அடுத்த வாரம் நடத்த பாகிஸ்தான் தயாராகி வருகிறது. பேச்சுவார்த்தையில் தொடர்ந்து அர்ப்பணிப்பு காட்டிய அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், பிராந்தியத்தில் எங்களுக்கு ஆதரவளித்த சகோதர நாடுகளுக்கும் எங்களது நன்றி.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தின் மூலம் நீண்டகால அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் மீண்டும் அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் உலக நாடுகளில் மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.