மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் என்றாலே சிக்ஸர் மழையும், அதிரடி ரன் குவிப்பும் தான் ரசிகர்களுக்கு உடனே நினைவுக்கு வரும். டி20 போட்டிகளில் ஒரு வீரர் சதம் அடிப்பதே பெரிய விஷயமாகக் கருதப்படும் நிலையில், ஒரு சில பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளைச்சிதறடித்து கண்ணிமைக்கும் நேரத்தில் 100 ரன்களை எட்டியுள்ளனர். இதில் ஒரு வீரர் வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி உலகையே அதிரவைத்தார். அந்தச் சாதனை படைக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் இப்போதும் தகர்க்க முடியாத ரெக்கார்டாக இருந்து வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 'யுனிவர்ஸ் பாஸ்' கிறிஸ் கெயில் ஆடிய அந்த அதிரடி ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. அந்தப் போட்டியில் அவர் வெறும் 30 பந்துகளில் சதம் கடந்து உலக சாதனை படைத்தார். 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த கெயிலின் அந்த 30 பந்து சதமே இப்போதும் ஐபிஎல் வரலாற்றின் அதிவேக சதமாக முதலிடத்தில் உள்ளது.

கெயிலின் சாதனைக்கு அடுத்தபடியாக, சமீப காலங்களில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட் உலகையே தனது பக்கம் திருப்பியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர், 2025-ம் ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக 35 பந்துகளிலும், மீண்டும் 2026-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளிலும் சதம் விளாசி இந்தப் பட்டியலில் 2 மற்றும் 3-வது இடங்களைப் பிடித்துள்ளார்.
இந்திய வீரர்களைப் பொறுத்தவரை, 2010-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ர் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் அடித்த சதம் இப்போதும் ஒரு மைல்கல்லாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஹென்ரிச் கிளாசென் கடந்த 2025 சீசனில் 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இவர்களைத் தவிர டேவிட் மில்லர், டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் ஐபிஎல் வரலாற்றின் அதிவேக சதங்கள் அடித்த டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.