லக்னோ: 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 68-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளாசிய மின்னல் வேக சதம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 197 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 18 ஓவர்களிலேயே எட்டியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் பிளே-ஆப் ரேசில் தனது வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் தொடக்க வீரர் ஜோஷ் இங்லிஸ் 44 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்.

நடுவரிசையில் ஆயுஷ் பதோனி 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இருப்பினும், கேப்டன் ரிஷப் பண்ட் 22 பந்துகளில் வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ரன் வேகத்தைக் குறைத்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பஞ்சாப் தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே பிரியான்ஷ் ஆர்யா 0 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கூப்பர் கான்னொலி 18 ரன்களில் வெளியேறினார். 22 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் தடுமாறிய போது, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஜோடி சேர்ந்தனர்.
இந்த ஜோடி லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் மழையைப் பொழிந்தார். வெறும் 51 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 101 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இது ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயரின் முதல் சதம் ஆகும். அவருக்கு ஈடுகொடுத்து ஆடிய பிரப்சிம்ரன் சிங் 39 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 140 ரன்களைச் சேர்த்தது.
IPL 2026: சொதப்பிய கேப்டன் ரிஷப் பண்ட்.. போராடி பஞ்சாப் அணிக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த லக்னோ
இறுதியில் பஞ்சாப் அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. லக்னோ தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களம் இறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர், அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பிரப்சிம்ரன் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் 4 ஓவர்களில் 36 ரன்கள் கொடுத்தார். இந்த அதிரடி வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.