தர்மசாலா: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. தர்மசாலாவில் பெய்த பலத்த மழை காரணமாக ஆட்டம் 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு மாலை 5:45 மணிக்கு தொடங்கியது.
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மதியம் 1:30 மணிக்கு தொடங்க வேண்டிய ஆட்டம், தொடர்ந்து பெய்த சாரல் மழையால் தள்ளிப்போனது. மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால் ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது.

பின்னர் மாலை 4:55 மணியளவில் மழை நின்று வெயில் வந்ததையடுத்து, மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை உலர்த்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாலை 5:15 மணிக்கு டாஸ் வீசப்பட்டு, ஆட்டம் மாலை 5:45 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. மழையால் ஆட்டம் தாமதமானதால், 50 ஓவர் போட்டி தலா 25 ஓவர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. பவர்பிளே 5 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு இருப்பதுடன், ஒரு பந்துவீச்சாளர் அதிகபட்சமாக 5 ஓவர்கள் மட்டுமே வீச முடியும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். மேகமூட்டமான வானிலை நிலவுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என கில் தெரிவித்தார். மேலும், உலகக் கோப்பைக்கு முன் 15 முதல் 20 போட்டிகள் இருப்பதால் பல்வேறு வீரர்களை சோதித்துப் பார்க்க உள்ளதாகவும், இந்தப் போட்டியில் ஹர்ஷ் துபே மற்றும் குர்னூர் பிரார் என இரண்டு வீரர்கள் அறிமுகமாக உள்ளதாகவும் அவர் கூறினார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், பிரின்ஸ் யாதவ் மற்றும் குல்தீப் யாதவ் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாஹிதி பேசுகையில், தானும் முதலில் பந்துவீசவே விரும்பியதாகக் கூறினார். இந்தியாவில் நாங்கள் விளையாடும் முதல் இருதரப்பு தொடர் இது என்பதால் மிகவும் உற்சாகமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
ஐபிஎல்-ல் அதிரடி மாற்றங்கள்.. ஏலத் தொகை உயர்வு, 94 போட்டிகள்.. பிசிசிஐ-ன் முழு பிளான் என்ன?
பிட்ச் அறிக்கை வழங்கிய முரளி கார்த்திக், ஆடுகளம் கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்தாலும், ஈரப்பதம் எதுவும் இல்லை என்றார். தர்மசாலா மைதானம் கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் உள்ளதால் பந்து வேகமாகப் பயணிக்கும். இதனால் 25 ஓவர் போட்டியாக இருந்தாலும் 200 முதல் 220 ரன்கள் வரை அடிக்க வாய்ப்புள்ளது என்று அவர் கணித்துள்ளார்.
இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, குர்னூர் பிரார், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா..
ஆப்கானிஸ்தான் அணி: இப்ராகிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், இக்ராம் அலிகில், ரஷித் கான், முகமது சலீம் சாஃபி, ஏஎம் கசான்பர், ஜியா உர் ரஹ்மான் ஷெரிபி.