தம்புள்ளா: இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (ஜூன் 11) நடைபெற்ற லீக் ஆட்டத்தில், பலம் வாய்ந்த இந்திய ‘ஏ’ அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணி வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தம்புள்ளா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய 'ஏ' அணி 9 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. இந்திய அணிக்கு தொடக்க வீரர் வைபவ் சூரியவன்ஷி 22 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து அதிரடி தொடக்கம் தந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் 84 ரன்கள் விளாசினார். இவர்களுடன் பொறுப்புடன் ஆடிய கேப்டன் திலக் வர்மா 66 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 66 ரன்களும் எடுத்தனர். இருப்பினும், 38வது ஓவரில் ஃபர்மனுல்லா சாஃபி வீசிய பந்துகளில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் பதோனி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
இறுதி நேரத்தில் சூர்யான்ஷ் ஷெட்ஜ் அதிரடியாக 40 ரன்கள் எடுக்க, இந்தியா வலுவான ஸ்கோரை எட்டியது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் அப்துல்லா அகமத்ஸாய் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர் மழையின் குறுக்கீடு காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் இலக்கு 38 ஓவர்களில் 294 ரன்களாக டக்வொர்த் லூயிஸ் விதியின்படி மாற்றியமைக்கப்பட்டது.
கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். கேப்டன் இம்ரான் அதிரடியாக விளையாடி 75 ரன்களுடனும், பஹிர் ஷா 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி 25.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்திய அணியில் நுழைந்த ஜாம்பவான் ராகுல் டிராவிட்டின் மகன்.. அண்டர்-19 அணியில் அன்வேவுக்கு வாய்ப்பு
இதையடுத்து டக்வொர்த் லூயிஸ் விதியின்படி, அந்த ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 4 ரன்கள் அதிகமாக எடுத்திருந்தது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் 'ஏ' அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் அடங்கிய இந்திய 'ஏ' அணிக்கு இந்த தோல்வி மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.