← முகப்பு செய்திகள்

CSK vs LSG: Chennai Super Kings face a must-win battle against Lucknow

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 22 பார்வைகள்
CSK vs LSG: Chennai Super Kings face a must-win battle against Lucknow

லக்னோ: ஐபிஎல் 2026 தொடரின் 59-வது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க சிஎஸ்கே அணிக்கு இது மிக முக்கியமான போட்டியாகும். இக்கட்டான இந்தச் சூழலில், லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்ரார்.

லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் சற்று 'டாக்கி' எனப்படும் ஒட்டும் தன்மையுடன் காணப்படுவதால், முதலில் பந்துவீசி சிஎஸ்கே அணியைக் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

CSK vs LSG Rishabh Pant Wins Toss and Elects to Bowl against Chennai Super Kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, இந்த ஆட்டத்தில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் தனது முதல் ஐபிஎல் போட்டியில் அறிமுகமாகிறார். மேலும், முகேஷ் சவுத்ரி மற்றும் உர்வில் படேல் ஆகியோருக்கும் அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அணியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பராகவும், ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாகவும் களமிறங்குகின்றனர்.

டாஸ் நிகழ்வின் போது பேசிய ருதுராஜ் கெய்க்வாட், "மஞ்சள் சீருடையை அணிந்து விளையாடுவதே ஒரு பெருமைதான். இந்தப் பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்து 170 முதல் 180 ரன்கள் எடுத்தால் அது சவாலான இலக்காக இருக்கும். காயம் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் நமது கட்டுப்பாட்டில் இல்லை என்றாலும், இது புதிய வீரர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமையும்" எனத் தெரிவித்தார்.

மறுபுறம், லக்னோ அணியில் ஆகாஷ் சிங் இந்த சீசனில் தனது முதல் போட்டியில் விளையாடுகிறார். இது தவிர அப்துல் சமத் மற்றும் முகுல் சவுத்ரி ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், "அணியின் மீது எங்களுக்குப் பெரிய நம்பிக்கை உள்ளது. இந்த சீசனில் எங்களது ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்பதை மறுக்க முடியாது. இருப்பினும், அடுத்த சீசனுக்காக சில புதிய வீரர்களைச் சோதித்துப் பார்க்கிறோம். இந்தப் போட்டியில் எங்களது 200 சதவீத உழைப்பைக் கொடுப்போம்" என்றார்.

ஆடுகளம் குறித்து ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மற்றும் இயன் பிஷப் கூறுகையில், மைதானத்தில் புற்கள் ஏதுமின்றி வறண்ட நிலையில் உள்ளது. பந்து சற்று தாழ்வாக வரவோ அல்லது எதிர்பாராத வகையில் திரும்பவோ வாய்ப்புள்ளது. குறிப்பாக மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் கைகொடுக்கும். ரெட் சாயில் பிட்ச் என்பதால் ஆட்டத்தின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கூடுதல் பவுன்ஸ் கிடைக்கலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கக் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 200 ரன்களுக்கு மேல் எடுப்பது கடினமான காரியமாகவே இருக்கும் என அவர்கள் கணித்துள்ளனர்.

IPL: ஐபிஎல் தொடரில் அதிகமுறை பிளே ஆப் போன அணி எது? சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் எத்தனை முறை போயுள்ளது?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), உர்வில் படேல், கார்த்திக் சர்மா, டெவால்ட் பிரெவிஸ், சிவம் துபே, பிரசாந்த் வீர், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, ஸ்பென்சர் ஜான்சன், முகேஷ் சவுத்ரி.

சென்னை சூப்பர் கிங்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: குர்ஜப்னீத் சிங், அகேல் ஹொசைன், சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி: மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், எய்டன் மார்க்ரம், ரிஷப் பண்ட் (கேப்டன்), முகுல் சவுத்ரி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, முகமது ஷமி, மயங்க் யாதவ், ஆகாஷ் மகராஜ் சிங், பிரின்ஸ் யாதவ்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இம்பாக்ட் சப்ஸ்: ஜோஷ் இங்கிலிஸ், மணிமாறன் சித்தார்த், திக்வேஷ் சிங் ரதி, ஹிம்மத் சிங், ஆயுஷ் பதோனி

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net