உலக சினைப்பை புற்றுநோய் தினம்: அறிகுறிகள், கண்டறியும் வழிகள் மற்றும் சிகிச்சைகள் – நிபுணர் விளக்கம்

காணொளிக் குறிப்பு, சினைப்பை புற்றுநோயைக் கண்டறிய வழிகள் உண்டா? – மருத்துவர் விளக்கம்
  • எழுதியவர், ஹேமா ராகேஷ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்தியாவில் சினைப்பை புற்றுநோய் என்பது பெரியளவில் பெண்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படாத ஒன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், சினைப்பை புற்றுநோய் எப்படி உருவாகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்து கொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.

சினைப்பை புற்றுநோய் வருவதற்கான காரணம் என்ன?

ஹார்மோன் குறைபாடு, மாதவிலக்கு சுழற்சியில் ஏற்படும் குறைபாடுகள், கருத்தரிக்காமல் இருக்கக்கூடிய சில சூழல்கள் மற்றும் பிரச்னைகள், குறிப்பாக மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் உடற்பருமன் போன்றவை சினைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

சில நேரங்களில் பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அதிகப்படியாக சுரந்தாலும் பிரச்னைகள் ஏற்பட்டு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பிரசவித்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கவில்லை என்றாலும், பிரசவமே நடக்காத பெண்களுக்கும் குறிப்பிட்ட சதவீத அளவில் சினைப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்போது பல பெண்கள் அதிக அளவில் மது பழக்கத்தையும் புகைபிடிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே பெண்களுடைய ஹார்மோனில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி அது மார்பகப் புற்றுநோய்க்கும் சினைப்பை புற்றுநோய்க்கும் வழி வகுக்குகிறது.

சினைப்பை புற்றுநோயை எப்படி கண்டறிவது?

சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

துரதிர்ஷ்டவசமாக இப்போதைக்கு சினைப்பை புற்றுநோயின் ஆரம்பநிலையை உடனடியாக நாம் கண்டறிய இயலாது. ஏனென்றால் ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில், வயிறு வலி குறைவான ரத்தப்போக்கு என ஒரு சில அறிகுறிகள் இருக்கலாம்.

ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருப்பதால் அவற்றை சினைப்பை புற்றுநோய் என்று எடுத்துக்கொள்ள முடியாது. பிரிட்டனில் சினைப்பை புற்றுநோயைக் கண்டறிய இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆனால் துரதிஷ்டவசமாக இந்த சினைப்பை புற்றுநோயின் ஆரம்ப நிலையை அவர்களால் ஸ்க்ரீனிங் (Screening) மூலம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சினைப்பை புற்றுநோயின் ஆரம்பக்கட்ட பரிசோதனை என்பது தோல்வியில் முடிந்துள்ளது. ஆனால் ஆரம்ப நிலையை வரும் முன் காப்போம் என்ற எண்ணத்தின் மூலம் நாம் தடுக்க முடியும்.

ஒரு குடும்பத்தில் இரண்டு தலைமுறைகளுக்கு உட்பட்டு பெண்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்தக் குடும்பத்தில் உள்ள மற்ற பெண்களுக்கு ஹார்மோன் தொடர்பான பிரச்னைகளும் மரபணு காரணமாக ஏற்படக்கூடிய நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய்
படக்குறிப்பு, புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.

ஆகையால் இரண்டு தலைமுறைகளில் குடும்பத்தில் ஒரு பெண்ணின் அக்கா, தங்கை மற்றும் சித்தி பெண், பெரியம்மா பெண் போன்றவர்களுக்கு புற்றுநோய் இருந்ததாக நீங்கள் கண்டறிந்தால் 30 வயதுக்குப் பிறகு நீங்களும் உங்களுக்கான முழு உடல் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் அவசியம்.

சினைப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால் அதற்கு சிகிச்சை முறை இருக்கிறதா?

நிச்சயம் சிகிச்சைகள் இருக்கின்றன. சிகிச்சை என்பதைத் தாண்டி சினைப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு எந்த மரபணு மாற்றம் காரணமாக இந்த சினைப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்பதையும் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக நாம் கண்டறிய முடியும்.

நாங்கள் மருத்துவத்துறையில் ‘Molecular Studies’ என்று சொல்லுவோம். இந்தியாவில் இருக்கக்கூடிய பல நகரங்களில் இந்த வசதிகள் வந்திருக்கின்றன. சினைப்பை புற்றுநோய் 2, 3 மற்றும் 4ஆம் கட்டத்தில் இருந்தாலும் அதை சிகிச்சையின் மூலம் குணப்படுத்த முடியும்.

நோய் எந்தெந்த இடங்களில் பரவி இருக்கிறது என்பதை ஸ்கேன் மூலம் நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதற்கு இரண்டு சிகிச்சைகள் இருக்கின்றன, ஒன்று அறுவை சிகிச்சை மற்றொன்று கீமோதெரபி.

சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

இப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தின் மூலம் பக்க விளைவுகள் இல்லாத கீமோதெரபி சிகிச்சையையும் நாம் வழங்க முடியும்.

மேலும் இவைற்றையெல்லாம் தாண்டி டார்கெட் தெரபி (Target Therapy) என்ற ஒரு சிகிச்சை முறை இருக்கிறது. புற்றுநோய் கட்டி வளர்வதற்கு ரத்த நாளங்கள் தேவை. அதேபோல் புற்றுநோய் கட்டி இன்னொரு இடத்தில் பரவுவதற்கும் ரத்த நாளங்கள் தேவை. புற்றுநோய் கட்டி இருந்த இடத்தில் ரத்த நாளங்கள் வளராமல் இருப்பதற்கு டார்கெட் தெரபி சிகிச்சை இருக்கிறது. அதற்கான மருத்துவ வசதிகளும் இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்றன.

சினைப்பை புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சினைப்பை புற்றுநோய் வராமல் தடுப்பதற்கு முதன்மையான தற்காப்பு, பெண்கள் தங்களுடைய உடல் நலனில் சிறந்த அக்கறையைச் செலுத்துவதுதான். நமக்குத்தான் திருமணம் ஆகிவிட்டதே, குழந்தை பிறந்துவிட்டதே, இனி என்ன என்று நினைக்காமல் எல்லா வயதிலும் பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்து தங்களுடைய உடல் எடையை சீரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அதேபோல தங்களுடைய உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன் சமநிலை சரியாக இருக்க வேண்டுமெனில் தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம்.

சினைப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

இதைவிட மிக முக்கியம் ஸ்கிரீனிங். 30 வயதைத் தாண்டிய பெண்கள் சினைப்பை புற்றுநோய் பரிசோதனையையும், 40 வயதைத் தாண்டிய பெண்கள் மார்பகப் புற்றுநோய் பரிசோதனையையும் சீரான இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும்.

அதேபோல வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனையையும் மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் ஏற்கெனவே ஏற்பட்டிருக்கிறது என்பது தெரிந்தால் 30 வயதிற்குப் பிறகு பெண்கள் தங்களுடைய மகப்பேறு மருத்துவரை அணுகி டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் (Transvaginal Scan) என்ற பரிசோதனையை சீரான இடைவெளியில் மேற்கொண்டால் கருமுட்டையில் மற்றும் கர்ப்பப்பையில் ஏதாவது சிறிய மாற்றம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

டிரான்ஸ்வஜினல் ஸ்கேன் பரிசோதனை என்பது இரண்டு நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்களில் செய்யக்கூடிய ஒரு சிறிய பரிசோதனை.

மேலும் தங்களுடைய உடல் உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவுகளை உண்பது, ஹார்மோன் சமநிலையைப் பேணுவது, உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிப்பது போன்றவற்றைச் சரியாகச் செய்தாலே எல்லா நோய்களில் இருந்தும் பெண்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும்.