மட்டக்களப்பில் மண்டை ஓடு மீட்பு!!

by admin

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனந்தெரியாத ஆணின் மண்டையோடு மற்றும் எலும்புகள் நேற்று சனிக்கிழமை (04) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்குவில் காவல்துறையினர் தெரிவித்தனர். 

நேற்று சனிக்கிழமை பகல் இந்த ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் மண்டையோடு மற்றும் இரண்டு எலும்புகள் சிக்கியதையடுத்து அதை கரைக்கு கொண்டுவந்துள்ளார். 

இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறைத் தடயவியல் பிரிவினர் விரைந்து சென்று  பார்த்துள்ளனர். 

அதனை தொடர்ந்து, அந்த மண்டையோடு 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவருடையது என பகுப்பாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமான தர்சினி குறித்த இடத்துக்குச் சென்று மண்டையோடு மற்றும் எலும்புகளை பார்வையிட்டார். 

பின்னர், அவற்றை பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து மீட்கப்பட்ட மண்டையோடு, எலும்புகள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த மண்டையோடானது கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி காணாமல்போன, மனநலம் குன்றிய 28 வயதுடைய இளைஞனான பழைய பனிச்சையடியைச் சேர்ந்த செல்வராசா நிதுஷன் என்பவருடையது என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும், எனினும் மண்டையோடு இதுவரை உறுதியாக அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்