டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக ஜனாதிபதி நீக்கவேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் !

by admin

டிரான் அலஸை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக ஜனாதிபதி நீக்கவேண்டும் – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வேண்டுகோள் ! on Monday, April 29, 2024

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் சமீபத்தில் விசேட அதிரடிப்படையினரின் முகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்களை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது சமீபத்தைய பேரவை கூட்டத்தில் கண்டித்துள்ளது.

குற்றவாளிகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவது குற்றமில்லை சரியான விடயத்திற்காக உங்கள் கரங்களில் உள்ள ஆயுதங்களை பயன்படுத்த தயங்கவேண்டாம் நாங்கள் உங்களிற்கு ஆதரவாகயிருப்போம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து குறித்து ஆழ்ந்த கரிசனையை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இது இலங்கையின் அரசமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அடிப்படை கொள்கைகளிற்கும் குற்றவியல் நீதி அமைப்புமுறையை வழிநடத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கும் முரணாணது எனவும் தெரிவித்துள்ளது.

தவறிழைத்தவர்களிற்கு அபராதம் விதிப்பது உட்பட நீதியை வழங்குவது இலங்கை அரசமைப்பின் ஆணையின்படி முற்றுமுழுதாக நீதித்துறையின் நியாயாதிக்கத்திற்குள் வருகின்றது என தெரிவித்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இவ்வாறான நடவடிக்கைகளின் உரிய நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றவேண்டும் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் சட்டத்திற்கு ஏற்ப நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத படுகொலைகள் பொலிஸ் தடுப்பில் மரணங்கள் சட்ட அமுலாக்கல் பிரிவினரின் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துள்ள நிலையில் நீதிவழங்குதல் தீர்ப்பளித்தல் தண்டனை என்பன நீதித்துறையின் கண்காணிப்பிற்கு அப்பாற்றபட்டவை அவற்றை கண்மூடித்தனமாக முன்னெடுக்கலாம் என்ற எண்ணத்தை அமைச்சர் டிரான் அலஸின் கூற்று உருவாக்குகின்றது எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமைச்சர் தொடர்ச்சியாக பொறுப்புணர்வு அற்ற விதத்தில் கண்மூடித்தனமாக மற்றும் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை அவற்றை திருத்தவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதுஎனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பின் காவலன் என்ற அடிப்படையில் மக்களின் நலன்களிற்கு சேவையாற்றவேண்டிய தேவை அமைச்சருக்குள்ளது -எனினும் தொடர்ச்சியாக தவறாக வழிநடத்தும் அறிக்கைகளை அவர் வெளியிடுவது பொதுமக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் சட்ட அமுலாக்கல் தரப்பினரை தவறாக வழிநடத்துகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அமைச்சர் தனது கூற்றை உடனடியாக வாபஸ்பெறவேண்டும் என இலங்கைசட்டத்தரணிகள் சங்கம் கோருவதுடன் அமைச்சர் தனது தொடர்ச்சியான அறிக்கைகள் மூலம் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தல் சட்டத்தின் ஆட்சியை அலட்சியம் செய்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதால் அவரைஉடனடியாக ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்