முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக தளர்த்தி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ராஜித சேனாரத்னவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன, மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவரது சட்டத்தரணிகள் இன்று (26) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த பிரதான நீதவான், ராஜித சேனாரத்னவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி வரை தற்காலிகமாக நீக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.