தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு போதைப்பொருள் கடத்திய சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 23 தேரர்களையும், தாமாக முன்வந்து துறவறத்தை கைவிடுமாறு மகா சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெல்லஸ்ஸ, பிந்தென்ன மற்றும் கிழக்கு மாகாணத்தின் பிரதம சங்கநாயக்கர் பதவியைப் பெற்ற மகாஓயா ஜினரதன தேரரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
சிறையில் உள்ள 23 தேரர்களையும் மும்மகா நிக்காயாக்களின் லேகாதிக்காரி தேரர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்த தேரர்களின் செயற்பாடுகள் காரணமாக உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பௌத்த சாசனத்திற்கு பெரும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகளின் போது காவி உடை அணிந்து வரிசையாக செல்வது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. எனவே, தாமாக முன்வந்து துறவறத்தை கைவிடுமாறு அவர்களிடம் கோரப்பட்டுள்ளது.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டால், மீண்டும் அவர்களை முறைப்படி துறவறத்தில் இணைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது அங்கிருந்த தேரர்கள் இந்த யோசனைக்கு இணங்கவில்லை. இவர்களில் பெரும்பாலானோர் சிறு வயது தேரர்களாவர். அவர்கள் யாரோ ஒருவரின் தூண்டுதலுக்கு உள்ளாகியே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை உணர முடிகிறது என மெதகம தம்மாநந்த தேரர்; தெரிவித்தார்.
துறவறத்தில் இருந்து கொண்டு தவறு செய்பவர்களை எவ்வாறு சாசனத்திலிருந்து நீக்குவது என்பது தற்போது சங்க சமூகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் இதன்போது கவலை வெளியிட்டார்.