← முகப்பு செய்திகள்

சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாக

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 30 பார்வைகள்
சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாக
சாய்ந்தமருது நகர சபை தொடர்பில் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு கிழக்கு ஆளுநருக்கு அவசர கோரிக்கை!

சட்டப்பூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சாய்ந்தமருது நகர சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உடனடியாகச் செயலாளரை நியமிக்குமாறும், தேவையான பணியாளர் குழாமை உள்வாங்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு சாய்ந்தமருது சட்டத்தரணிகள் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதானது,

2162/50 இலக்க மற்றும் புதன்கிழமை (14) திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் சாய்ந்தமருது நகர சபை சட்டப்பூர்வமாக உருவாக்கப்பட்டது.

அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் (SCFR 07/2023), குறித்த வர்த்தமானி அறிவித்தல் செல்லுபடியானது என்றும், இதற்கான தேர்தல் இன்னும் நடத்தப்படாவிட்டாலும் இது ஒரு சட்டப்பூர்வ உள்ளூராட்சி அதிகார சபையாகத் தொடர்கிறது என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நகர சபைகள் கட்டளையின் 9வது பிரிவின் கீழ், 2022 மார்ச் 20 ஆம் திகதி முதல் சாய்ந்தமருது நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பமாகியுள்ளதாகக் கருதப்படுவதால், அதன் நிர்வாகப் பணிகளைத் தாமதமின்றி முன்னெடுப்பது அவசியமாகும்.

சபையின் நிர்வாகச் செயல்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்கும் வகையில், கிழக்கு மாகாண பொதுச் சேவையின் தகுதியுள்ள அதிகாரி ஒருவரைச் சபையின் செயலாளராக நியமிக்க வேண்டும் எனவும்

சபையின் அடிப்படைப் பணிகளை முன்னெடுக்கத் தேவையான அத்தியாவசிய உத்தியோகத்தர்களை நியமிக்க வேண்டும் எனவும் குறிப்பாக, தற்போது கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது பகுதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வதன் மூலம் இந்தப் பணியாளர் தேவையை இலகுவாகப் பூர்த்தி செய்ய முடியும் எனவும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், சாய்ந்தமருது நகர சபையின் எல்லைக்குள்ளேயே சபையினது செயல்பாடுகளுக்கான முறையான அலுவலகம் ஒன்றை விரைவாக ஸ்தாபித்து, பொதுமக்களுக்கான சேவைகளைத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால அபிலாஷையான இந்த நகர சபையின் செயல்பாடுகள் முடக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது ஆளுநரின் பொறுப்பாகும் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இக்கோரிக்கை கடிதத்தில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான அன்வர் சியாத், ஏ.எச்.அரூஸ் மற்றும் சட்டத்தரணிகளான என்.எம்.அசாம், ஷஃபி எச். இஸ்மாயில், ஏ.எல்.எம்.றிம்ஸாத், எம்.ஐ.எம்.ரிஸ்வான் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net