களுத்துறை, வெட்டுமகட பகுதியில் கடந்த 28ஆம் திகதி வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி மற்றும் அவருக்கு தங்குமிட வசதிகளை ஏற்பாடு மற்றொரு சந்தேகநபர் ஆகிய இருவரை பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு விசேட படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு தகவல்களை வழங்கி ஒன்றாக செயற்பட்டார் என்ற சந்தேகத்தின் பேரில், களுத்துறை தெற்கு மரிக்கார் வீதியைச் சேர்ந்த 43 வயதுடைய பக்கீர் முஹம்மது முஹம்மது சபிக் என்ற கால்நடை விநியோக வர்த்தகர், கடந்த 28ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இக் குற்றச் செயலை ஒழுங்கமைத்த முஹம்மது இம்ரான் மற்றும் துப்பாக்கிதாரிக்கு தங்குமிட வசதிகளை செய்து கொடுத்த சந்தேக நபர் ஒருவரும் களுத்துறை கிளப் வீதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபரிடமிருந்து 22,630 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாதாள உலகக் குழுத் தலைவனான ‘போம்புவல நவீன்’ என்பவனின் வழிநடத்தலின் கீழ், பிரதான சந்தேகநபரான இம்ரான் என்பவரே ஆயுதங்கள் ,துப்பாக்கிதாரியை பாதுகாப்பாக அழைத்துச் சென்று, பின்னர் அவர்களை மீண்டும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளமை விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.
இக்கொலைக்காகப் பயன்படுத்தப்பட்ட கார் தெபுவன பகுதியிலும், வேன் தொடங்கொட பகுதியிலும் கைவிடப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே மீட்கப்பட்டிருந்தன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு விசேட அதிரடிப்படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொலையாளிகளையும் ஆயுதங்களையும் கைப்பற்றுவதற்கான தேடுதல்களையும் முடுக்கிவிட்டுள்ளனர்.