ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு கோரி, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டது.
இந்த மனு நேற்றைய தினம் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் அமர்வு, குறித்த மனு மீதான விசாரணையை செப்டம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தமக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது எனத் தனது சட்டத்தரணிகள் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை முன்வைத்த போதிலும், மேல் நீதிமன்றம் அந்த ஆட்சேபனைகளை நிராகரித்ததாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேல் நீதிமன்றத்தின் அந்தத் தீர்மானம் சட்டத்துக்கு முரணானது எனவும், எனவே தமக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிடுமாறும் அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.