இறக்காமம் பிரதேச செயலக பிரிவை அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துக்குள் மீண்டும் சேர்ப்பதற்கான சாத்தியப்பாடுகளை நீதி அமைச்சு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இறக்காமம் பிரதேச செயலக பிரிவின் நீதி நிர்வாகம் 2012 ஆம் ஆண்டுக்கு முன்னர் அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் அது 2012 ஆம் ஆண்டு அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்தில் இருந்து நீக்கப்பட்டு அம்பாறை நீதிமன்ற வலயத்துக்குள் சேர்க்கப்பட்டது.
அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துக்குள் இறக்காமம் பிரதேச செயலக பிரிவு இயங்கி வந்தபோது இறக்காமம் பிரதேச மக்கள் மொழி ரீதியாக எந்த சிரமங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கவில்லை.
ஆனால் அம்பாறை நீதிமன்ற வளாகத்துக்குள் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து வழக்காடுதல், ஆவணப்படுத்துதல் போன்ற விடயங்களில் பாரதூரமான மொழி சிக்கல்களை பெரிதும் எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
இந்நிலையில் இறக்காமம் பிரதேச சபையின் உபதவிசாளர் கே. எல். சமீம் இறக்காமம் பிரதேச செயக பிரிவை இப்பிரதேச மக்களின் நலன் கருதி மீண்டும் அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துக்குள் இணைக்க வேண்டும் என்று நீதியமைச்சரை எழுத்துமூலம் கோரி இருந்தார்.
மொழி ரீதியாக அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்துக்குள் இணைக்கப்பட்டிருந்த இறக்காமம் பிரதேச செயலக பிரிவு எந்த நியாயமான காரணங்கள் மற்றும் அடிப்படைகள் இல்லாமல், இப்பிரதேச மக்களின் விருப்பங்களை செவிமடுக்காமல், மக்களின் நலன்களை புறம் தள்ளி அம்பாறை நீதிமன்ற வலயத்துக்குள் திடீரென்று இணைக்கப்பட்டிருக்கிறது என்று இவர் சுட்டி காட்டினார்.
இதை அடுத்து இது தொடர்பில் மக்கள் நலன், இயற்கை நீதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு உரிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு அறிய தருமாறு நீதி அமைச்சு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது என்றும் இறக்காமம் பிரதேச செயலாளர், அம்பாறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஆகியோரின் அவதான அறிக்கை அம்பாறை கச்சேரியால் கோரப்பட்டிருக்கின்றது என்றும் தெரிய வந்திருக்கிறது.