நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேநேரம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம். குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்..
நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. அதேநேரம், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மேலதிக வரப்பிரசாதங்களை ஏற்கனவே நீக்கியுள்ளோம்.
குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக சிலர் உயர்நீதிமன்றம் சென்றிருந்தனர்.
எனினும், குறித்த ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையில்லை என்றும், சாதாரண பெரும்பான்மை வாக்களிப்பின் மூலமே அதனைச் செய்ய முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.
சபாநாயகரால் வெள்ளிக்கிழமை (6) பாராளுமன்றத்துக்க அறிவிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பின் பிரகாரம், எம்.பி களின் ஓய்வூதியத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு அரசாங்கம் மிக விரைவில் நடவடிக்கை எடுக்கும். மக்கள் பணத்தை வீண்விரயம் செய்வதைத் தவிர்த்து அதனை மீண்டும் மக்களுக்கே சென்றடையச் செய்வதே எமது இலக்காகும்.
ஹொரண வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கான மனித வள வெற்றிடங்கள் இதுவரை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை. இது தொடர்பில் நிதி அமைச்சு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்துடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.
அதற்கமைய, அத்தியாவசிய சுகாதார நிறுவனங்களுக்கான பணியாளர்களைத் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது. ஹொரண வைத்தியசாலைக்குத் தேவையான பணியாளர்களை நியமிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதம் முகாமைத்துவ திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்படும்.
அத்துடன் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு எதிர்வரும் பத்தாண்டுகளுக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்து வருகின்றது. தேசியக் கொள்கையின் அடிப்படையில் சுகாதாரத் துறையின் சவால்களைக் கண்டறிந்து, அதனை மேலும் வலுப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். சுகாதாரப் பிரிவின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் இயங்க வேண்டும்.
மேலும், நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டுள்ள வைத்தியசாலையின் ஆறு மாடி கட்டடத் தொகுதியின் பணிகளை மீள ஆரம்பிக்க அமைச்சின் ஊடாக புதிய கேள்விப்பத்திரங்களைக் கோரவுள்ளோம். இதன் மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதளவில் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க முடியும். இதற்காக இவ்வருடம் 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.