அகமதாபாத்: ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர தொடக்க வீரரான சாய் சுதர்சன், தனது அபாரமான பேட்டிங் திறமையால் வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பதித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மட்டுமே இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருந்தார். தற்போது கோலியின் இந்த இமாலய சாதனையை சாய் சுதர்சன் சமன் செய்து அசத்தியுள்ளார்.

இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பல முக்கிய இன்னிங்ஸ்களை விளையாடியுள்ள சாய் சுதர்சன், 13 போட்டிகளில் விளையாடி 554 ரன்கள் குவித்து, நடப்பு தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பியை (Orange Cap) தன்வசப்படுத்தியுள்ளார். இதில் ஒரு அதிரடி சதமும், 6 அரைசதங்களும் அடங்கும். அவரது சராசரி 46.17 மற்றும் ஸ்டிரைக் ரேட் 157.83 ஆக உள்ளது.
இந்த தொடர்ச்சியான அரைசதங்கள் தவிர, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது சாய் சுதர்சன் மற்றொரு உலக சாதனையையும் படைத்தார். டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிவேகமாக 3,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார். வெறும் 78 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை எட்டியதன் மூலம், ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் (85 இன்னிங்ஸ்) 13 ஆண்டுகளாக வைத்திருந்த சாதனையை சாய் சுதர்சன் தகர்த்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான இளம் இடதுகை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் தனது அசாத்தியமான திறமையால், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து வருகிறார் என்பதில் ஐயமில்லை. சாய் சுதர்சனின் இந்த அசுர ஃபார்ம் குஜராத் டைட்டன்ஸ் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எனினும், சாய் சுதர்சன் இது போன்ற பேட்டிங்கை சர்வதேச கிரிக்கெட்டில் வெளிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.