← முகப்பு செய்திகள்

IPL 2026 PBKS vs MI: Preity Zinta and Ricky Ponting Seen in

🕐 3 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 32 பார்வைகள்
IPL 2026 PBKS vs MI: Preity Zinta and Ricky Ponting Seen in

தரம்சாலா: பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா, அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உடன் ஆக்ரோஷமாக பேசிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 2026 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் அசுர பலத்துடன் வலம் வந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, தற்போது தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவி பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திற்குப் பின் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் முகத்தில் தோல்வியின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது.

கடந்த ஏப்ரல் மாதம் வரை முதல் 7 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காமல் 13 புள்ளிகளுடன் முதலிடத்தில் கெத்து காட்டியது பஞ்சாப். ஆனால், அடுத்தடுத்து 5 போட்டிகளில் வரிசையாக தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தரம்சாலாவில் நடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அஸ்மதுல்லா ஓமர்சாய் அதிரடியால் பஞ்சாப் அணி 200 ரன்களைக் குவித்தது. ஆனாலும் பந்துவீச்சாளர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாற்றம் அளித்தனர்.

போட்டியின் 18வது ஓவரில் மார்கோ ஜான்சென் 22 ரன்களை வாரி வழங்கியது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவை என்ற நிலையில், சேவியர் பார்ட்லெட் பந்துவீச்சில் மும்பை அணி எளிதாக வெற்றியைப் பறித்தது. மும்பை வீரர் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த தொடர் சரிவு அணி நிர்வாகத்தையும் கவலையடையச் செய்துள்ளது. போட்டி முடிந்ததும், அணியின் உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கிடம் மிகவும் தீவிரமாக விவாதித்த காட்சிகள் கேமராவில் பதிவாகின. எப்போதும் வீரர்களிடம் சிரித்த முகத்துடன் உற்சாகமாகப் பழகும் பிரீத்தி ஜிந்தா சற்று இறுக்கமான முகத்துடன் பேச, பாண்டிங் சோகமாக தலைகுனிந்தபடி நின்ற காட்சி அணியில் நிலவும் பதற்றமான சூழலை அப்பட்டமாக உணர்த்தியது.

டெல்லி அணிக்கு எதிராக 210 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்த பஞ்சாப், தற்போது 200 ரன்கள் அடித்தும் மும்பையிடமும் சரணடைந்துள்ளது. போட்டிக்குப் பின் சோகமாகப் பேசிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்த தோல்வியை நிச்சயமாக ஜீரணிக்கவே முடியவில்லை, இது மிகச்சிறந்த போட்டியாக அமைந்ததால் எவரையும் குறை சொல்ல விரும்பவில்லை என உடைந்த குரலில் தெரிவித்தார்.

IPL 2026: “இதை ஜீரணிக்கவே முடியலை”.. உடைந்து போன ஸ்ரேயாஸ் ஐயர்.. 5 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி

பஞ்சாப் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மதியம் நடக்கும் முக்கியமான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் வென்றால் மட்டுமே பஞ்சாப் அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு உறுதியாகும். அடுத்த திட்டம் என்ன என்பதை பாண்டிங் – ஸ்ரேயாஸ் கூட்டணி எப்படி செயல்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் செய்திகள்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net