முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் 03 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 03 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு அந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவை கடந்த 27 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு வருமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தனக்கு வருகை தர முடியாது எனவும், அதற்காக 02 வார கால அவகாசம் வழங்குமாறும் அவர் தனது சட்டத்தரணி ஊடாகப் பொலிஸாருக்கு அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்வரும் 03 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் அதற்காக வேறொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.