புதிய பாம்பன் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா காணத் தயாராகி வரும் நிலையில், பழைய பாரம்பரிய பாலத்தை அகற்றும் பணிகள் அடுத்த 4 மாதங்களுக்குள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பாலம், 111 ஆண்டுகால வரலாறு கொண்ட இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையைப் பெற்றது. புதிய பாலத்தின் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்யவும், கடல் நீரோட்டப் பாதுகாப்பிற்காகவும் பழைய பாலத்தின் இரும்புத் தூண்கள் மற்றும் ‘ஷெர்சர்’ (Scherzer) எனப்படும் தூக்குப் பகுதி முழுமையாக அகற்றப்பட உள்ளன. இந்தப் பாலத்தின் வரலாற்று மதிப்பைக் கருதி, அதன் முக்கியப் பகுதிகளை (குறிப்பாக தூக்குப் பாலத்தை) முழுமையாகச் சிதைக்காமல் அகற்றி, ஒரு புகையிரத அருங்காட்சியகமாக (Railway Museum) மாற்றி ராமேஸ்வரத்தில் பாதுகாக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பாலம் வெறும் இரும்புக்கட்டமைப்பு மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ராமேஸ்வரம் தீவுக்கு சுமந்து வந்த ஒரு வரலாற்றுச் சின்னம்.பழைய பாலம் 1914-இல் ஜெர்மன் பொறியாளர் வில்லியம் ஷெர்சர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இது ஒரு ‘ஊஞ்சல்’ போன்றது. பாலத்தின் மையப்பகுதி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, பின்னோக்கி உருண்டு (Rolling) மேல்நோக்கி உயரும். வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், இவ்வளவு பெரிய இரும்புப் பாலத்தை உயர்த்த ஆரம்ப காலங்களில் மனிதர்களே நெம்புகோல்களை (Levers) சுழற்றிச் செயல்பட்டு வந்தனர். கடும் கடல் காற்றையும், உப்புப் படிமங்களையும் தாங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டது இதன் பொறியியல் அதிசயமாகும். ஏப்ரல் 2025-இல் திறக்கப்பட்ட புதிய பாலம் இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம் (Vertical Lift Bridge) ஆகும். பழைய பாலம் பக்கவாட்டில் விரிவது போலன்றி, புதிய பாலத்தின் மையப்பகுதி (72.5 மீட்டர் நீளம்) அப்படியே நேராக மேல்நோக்கி ஒரு மின்தூக்கி (Elevator) போல உயரும். இது கணினி மூலம் கட்டுப்படுத்தப்படும் முழுமையான தானியங்கி முறையாகும். 17 மீட்டர் உயரம் வரை 5 நிமிடங்களுக்குள் இது உயர்ந்து கப்பல்களுக்கு வழிவிடும். பழைய பாலத்தி புகையிரதங்கள் 10 kmph வேகத்தில் மட்டுமே செல்ல முடியும். ஆனால் புதிய பாலத்தில் 80 – 98 kmph வேகத்தில் புகையிரதங்கள் சீறிப்பாய முடியும். அத்துடன் துருப்பிடிக்காத ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) மற்றும் சிறப்புப் பூச்சுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது 100 ஆண்டுகளுக்கு மேல் உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழைய பாலத்தின் ‘Scherzer Span’ பகுதியை அப்படியே அந்த அருங்காட்சியகத்தில் வைப்பதன் மூலம், எதிர்கால சந்ததியினர் இந்த 100 ஆண்டுகாலப் பொறியியல் அதிசயத்தை நேரில் கண்டு வியக்க முடியும். Tag Words: #PambanBridge #Rameswaram #IndianRailways #HeritagePreservation #PambanRailMuseum #History #SriLankaConnect #LKA #FarewellPamban
🚂 பாம்பன் பாலம் 111 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து விடைபெறுகிறது – Global Tamil News
6