செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக்கழகத்தின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலன புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது.
தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றது. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலையே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எழும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தே கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது என தெரிவித்தனர்.