இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 7 படகுகளை மீட்க 14 பேர் கொண்ட மீனவர்கள் குழு மீன்பிடி விசைப் படகில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 2022-23 ஆகிய ஆண்டுகளில் மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் 2023 ஆம் ஆண்டு 7 படகுகள் விடுவிக்கப்பட்டன. அந்த படகுகளை மீட்பதற்காக படகின் உரிமையாளர்கள் இந்திய இலங்கை அரசிடம் மனு அளித்திருந்தனர்.
அதற்கிடையில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனவர்களின் மனு பரிசீலிக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் இலங்கை வெளியுறவுத்துறை கடந்த வாரம் மீன்பிடி படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு தாயகம் எடுத்து செல்ல அனுமதி அளித்தது.
அதன் அடிப்படையில் இலங்கை மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள 7 படகுகளை பார்வையிட்டு திரும்ப எடுத்து வருவதற்காக ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்தில் இருந்து 14 பேர் கொண்ட குழு புறப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் விசைப்படகு ஒன்றில் இலங்கை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டனர். ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட மீனவர்கள் குழுவை மீன்பிடி படகுடன் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையினர் இலங்கை கடற்படை வசம் ஒப்படைக்க உள்ளனர்.
அவ்வாறு ஒப்படைக்கப்படும் மீனவர்கள் யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று மாலை சென்றடைந்து அங்கு குறிப்பிட்ட 7 படகுகளையும் ஆய்வு செய்கின்றனர். படகுகள் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில் படகை மீட்டு வரவும், எஞ்ஜின் கோளாறு காரணமாக மீட்க முடியாமல் கடலில் மூழ்கிய படகுகளை தமிழகத்திற்கு எடுத்து வருவது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்கிறது.
இவர்கள் இரண்டு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி படகுகளின் தரம் மற்றும் உறுதி தன்மை, என்ஜின்களில் ஏற்பட்ட பழுது குறித்து ஆய்வு செய்து நாளை மாலை மீண்டும் ராமேஸ்வரம் புறப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.