தென்கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த 2024 டிசம்பரில் நாட்டில் ராணுவ ஆட்சியை அறிவித்தபோது, அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அந்தச் சட்டவிரோத நடவடிக்கைக்கு சட்ட அங்கீகாரம் வழங்க முயன்றதாகவும் முன்னாள் பிரதமா் ஹான் டக்-சூ மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2024-ல் ராணுவ ஆட்சியை அமுல்படுத்தியது நாட்டின் அரசியலமைப்புக்கு எதிரான ஒரு ‘கிளர்ச்சி’ (Insurrection) என நீதிமன்றம் முதன்முறையாக இந்தத் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் இரண்டாவது உயரிய பதவியில் இருந்த ஹான் டக்-சூ, அதிபரின் தவறான முடிவைத் தடுக்கத் தவறியதுடன், அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி அதற்கு ஒரு சட்டப்பூர்வத் தன்மையைக் கொடுக்க முயன்றார் என நீதிபதி லீ ஜின்-க்வான் தெரிவித்தார். மேலும் ராணுவ ஆட்சி தொடர்பான முக்கிய ஆவணங்களை மறைத்தது மற்றும் அழித்தது, அத்துடன் விசாரணையின் போது பொய் சாட்சியம் அளித்தது (Perjury) போன்ற குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் 15 ஆண்டுகள் சிறை தண்டனை கோரியிருந்த நிலையில், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அதனை 23 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே 76 வயதான ஹான் டக்-சூ நீதிமன்றத்திலேயே கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். தென்கொரிய வரலாற்றில் ராணுவ ஆட்சி விவகாரத்தில் தண்டனை பெற்ற முதல் உயர்மட்ட அதிகாரி இவராவார். இந்தத் தீர்ப்பு, அடுத்த மாதம் (பெப்ரவரி 19) வழங்கப்படவுள்ள முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் தீர்ப்பிற்கு ஒரு முக்கிய முன்னோடியாகக் கருதப்படுகிறது. Tag Words: #HanDuckSoo #SouthKoreaNews #Insurrection #MartialLaw2024 #YoonSukYeol #SeoulCourt #LegalVerdict2026 #PoliticalCrisis #Justice
⚖️ தென்கொரிய முன்னாள் பிரதமருக்கு 23 ஆண்டுகள் சிறை! – Global Tamil News
9