லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்!...

லண்டனில் ஈரான் தூதரகம் முன்பாக பெரும் பதற்றம்: போராட்டக்காரர்கள் – காவற்துறை மோதல்! – Global Tamil News

by ilankai

லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்பாக நேற்று இரவு நடைபெற்ற பாரிய போராட்டம் வன்முறையாக மாறியதில், தூதரகக் கட்டிடம் சேதப்படுத்தப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளனர். ஈரானில் நிலவும் அரசியல் சூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், லண்டன் கென்சிங்டனில் (Kensington) உள்ள ஈரான் தூதரகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தின் போது ஒரு நபர் தூதரகத்தின் பால்கனி வழியாக ஏறிச் சென்று, அங்கு பறந்து கொண்டிருந்த ஈரான் தேசியக் கொடியை அகற்றிவிட்டு, பழைய முடியாட்சி காலத்து (Lion and Sun) கொடியை ஏற்ற முயன்றார். காவல்துறையினர் அந்த நபரை கைது செய்ய முயன்றபோது, போராட்டக்காரர்களுக்கும் காவற்தறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. காவற்தறையினர் மீது பாட்டில்கள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. இந்த மோதலில் 4 காவற்தறையினர் உட்பட பலர் காயமடைந்தனர். வன்முறையில் ஈடுபட்டதாக 14 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர காவல்துறை (Met Police) அறிவித்துள்ளது. தூதரகப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு, அப்பகுதியில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க அவசர கட்டுப்பாட்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. ஈரானில் சமீபகாலமாக போராட்டக்காரர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகெங்கும் உள்ள ஈரான் தூதரகங்கள் முன்பாக இத்தகைய போராட்டங்கள் வலுப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts