Tuesday, August 19, 2025
Home யாழ்ப்பாணம்ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

ஊடகவியலாளரை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சாவகச்சேரி நகர பிதா

by ilankai
0 comments

யாழ்ப்பாணம் , சாவகச்சேரி நகர சபை மாதாந்த கூட்டத்தில் இருந்து ஊடகவியலாளர் ஒருவர் நகர பிதாவின் பணிப்பின் பேரில்  வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார். 

நகர சபையின் மாதாந்த கூட்டம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நகர பிதா வடிவேலு சிறிபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. 

அதன் போது, சென்ற கூட்ட அறிக்கையில் பல விடயங்கள் விடுபட்டு உள்ளதாகவும் , யார் யார் என்ன கருத்து கூறினார்கள் என்ற விடயம் குறிப்பிடப்படவில்லை எனவும் , உப நகர பிதா ஞா. கிசோர் சென்ற கூட்ட அறிக்கை வாசித்த போது தனது எதிர்ப்பினை வெளியிட்டார். 

அதன் போது உபநகர பிதாவின் உரையை இடைநிறுத்திய நகர பிதா , அங்கிருந்த ஊடகவியலாளரை , வெளியேற்றுமாறு , நகர சபை உத்தியோகஸ்தர்களுக்கு பணித்துள்ளார். 

banner

அதனை அடுத்து கூட்டத்தில் இருந்த ஊடகவியலாளர் , தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திய போதிலும் , சபை அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியில்லை என கூறி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். 

உள்ளூராட்சி சபைகளின் மாதாந்த கூட்டங்களில் ஊடகங்கள் கலந்து கொள்வதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள ஏனைய சபைகள் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சாவகச்சேரி நகர சபையில் மாத்திரம் ஊடகங்களுக்கு அனுமதியில்லை என ஊடகவியலாளரை அங்கிருந்து நகர பிதா வெளியேற்றிய சம்பவம் சக ஊடகவியலாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாவகச்சேரி நகர சபை நகர பிதா தெரிவின் போது , ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் , சபையில் நடைபெறும் விடயங்கள் மக்கள் மத்தியில் சென்றடைவதை தடுக்கும் முகமாகவே ஊடகவியலாளரை சபையில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் , குறிப்பாக சென்ற கூட்ட அறிக்கையில் உள்ள குறைப்பாடுகளை உபநகர பிதா சுட்டிக்காட்டி உரையாற்றும் போது ஊடகவியலாளரை அங்கிருந்து அப்புறப்படுத்தியமை தவிசாளர் தனது தவறுகளை வெளியில் தெரியாமல் தடுக்கவே எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. 

You may also like