யாழ்ப்பாணத்தில் இந்த ஆண்டு 500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு வீடமைப்பு , நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக யாழ். மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வீட்டுத்திட்டம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெறாது. குறித்த கலந்துரையாடலின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 வீடுகள் நிர்மாணிப்பதற்கான ஒதுக்கீடுகள் கிடைத்துள்ளது என்றார். வீட்டுத்திட்ட பயனாளிகள் பட்டியல்களை சுற்றுநிருபத்திற்கு அமைய தெரிவு செய்யுங்கள் எனவும், வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெறாத நபர்கள் மற்றும் கொடுப்பனவு தேவைப்படுபவர்கள் தொடர்பிலான விபரங்களை கையளியுங்கள் என பிரதேச செயலர்களிடம் கோரினார். இக் கலந்துரையாடலில் மேலதிக செயலர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
5