வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்துவதாக அறிவித்துள்ள ஹர்த்தால் எதிர்வரும் 18 ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும், ஏனைய குருமாருடனும் சுமந்திரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மன்னாரில் கலந்துரையாடினார். 

அதையடுத்து தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானத்துடனும் நல்லூர் உற்சவ தினங்கள் குறித்தும் கலந்துரையாடிய பின்னர் முன்னர் அறிவித்தபடி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி ஹர்த்தாலை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை என்றும், அதனை எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.