முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் காவற்துறைப் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முத்துஐயன்கட்டு பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.