செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உடல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேவேளை, உள்ளக விசாரணையை திணிக்கும் அரச தலைவரைக் கண்டித்தும் பாரிய கண்டன பேரணியை எதிர்வரும் 30ம் திகதி நடத்த உள்ளோமெனவும் சங்கத்தின் செயலாளர் சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார்.

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தினமாகும். இத்தினத்தில் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியை நடத்த உள்ளோம்.

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் சர்வதேச நீதி கோரி தொடர்ச்சியாக போராடி வருகிறோம்,  ஆயுத மௌனிப்புடன் 2009ம் ஆண்டு யுத்தமானது மிகப் பெரும் இனவழிப்பின் ஊடக முடிவுறுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னரும் அதன் பின்னரும் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் இனவழிப்பு,செம்மணி மனித புதைகுழி உட்பட பல மனித புதைக்குழிகளும், சித்திரவதை முகாம்கள் ஆகியவை இனப்படுகொலைக்கான முக்கிய ஆதாரங்களாக எம் கண் முன் நிலைத்து நிற்கின்றது இவை அனைத்தும் சர்வதேச விசாரணை ஒன்றின் கீழ் முறையாக விரைந்து விசாரிக்கப்பட வேண்டும்.

சர்வதேச நீதி விசாரணை காலதாமதமின்றி நடாத்தப்பட வேண்டும். எதிர்வரும் 30ம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒருமித்து இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறும் மனித உரிமைகளை பேணும் அனைத்து நாடுகளுடனும் கோருகின்றோம். 

பேரணி கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும், வடமாகாணத்தில் சங்கிலியன் நினைவிடத்தில் தொடங்கி செம்மணி வரை பேரணியாக நடைபெறவுள்ளதாகவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கம் தெரிவித்துள்ளது.