யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆடைகள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் 1.30 மணியிலிருந்து பிற்பகல் 5 மணிவரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது . காணாமல் ஆக்கப்பட்டவர்களின்செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் குறித்த சான்று பொருட்கள் நீதிமன்ற காவலுடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் ,  உறவுகள் அவற்றை பார்வையிட்டு இருந்தனர்.

குறித்த சான்று பொருட்களில் குழந்தைகளின் பொம்மை , குழந்தை ஒன்றின் பால் போச்சி ,  குழந்தைகளின் காலணிகள் , புத்தக பை, கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட 54 சான்று பொருட்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.  சான்று பொருட்களை மக்கள் பார்வையிட மதியம் 1.30 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் , புதைகுழி அகழ்வு பணிகள் மதியத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை செம்மணி பகுதியில் மேலதிக  காவல்துறையினா் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் , சான்று பொருட்களையோ, அவற்றை பார்வையிட வருவோரையோ,  செம்மணி புதைகுழி காணப்படும் சுற்றுவட்டார பகுதிகளில் ஊடகங்கள் உள்ளிட்ட எவருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்ற கட்டளை 

செம்மணி மனிதப் புதைகுழி சான்றுப்பொருள்களைப் பார்வையிடுவது தொடர்பான ஒழுங்கு விதிகள் பற்றி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் கடந்த 2ஆம் திகதி கட்டளை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1. மேற்படி, நடவடிக்கையானது ஒரு நீதிமன்ற நீதிமன்ற நடவடிக்கைக்குரிய நடவடிக்கையாக காணப்படுவதால்,  கண்ணியம். அந்நடவடிக்கையில் பங்கேற்கும் நபர்களால் பேணப்பட வேண்டும்.

2. காணாமல் போன நபர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்த உறவினருக்கே முன்னுரிமை வழங்கப்படும். அவர்கள் தம்முடைய உறவுகள் காணாமல் போனதை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணம் ஒன்றினைச் சமர்ப்பிப்பது விரும்பத்தக்கது. ஏனைய நபர்களை அனுமதிப்பது தொடர்பில், முற்படுத்தப்படும் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

3. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் நபர்களது பெயர், அடையாள அட்டை இலக்கம் (அல்லது கடவுச்சீட்டு இலக்கம் அல்லது சாரதி அனுமதிப்பத்திர இலக்கம்). முகவரி என்பன நீதிமன்ற உத்தியோகத்தர்களால் பதிவு செய்யப்படும்.

4. இருபத்தொரு (21) வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மாத்திரம், மேற்படி நடவடிக்கையில் பங்குபற்ற அனுமதிக்கப்படுவார்கள்

5. பங்குபற்றும் நபர்கள்; மேற்படி நீதிமன்ற நடவடிக்கையையோ அல்லது காண்பிக்கப்படும் பொருட்களையோ, ஒலி, ஒளிப்பதிவு செய்யவும், எந்தவொரு இலத்திரனியல் உபகரணங்களை எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகின்றது.

6. மேற்படி நடவடிக்கையில் பங்குபற்றும் காணாமல் போன நபர்களின் உறவினர்கள் சட்டத்தரணி ஒருவருடன் தோன்றவும் நீதிமன்றம் அனுமதி வழங்குகின்றது.

7. பங்குபற்றும் நபர்கள்; காண்பிக்கப்படும் சான்று பொருட்களை கையாளுவதற்குத் தடை விதிக்கப்படுகின்றது.

8. மேற்படி நடவடிக்கை ஒரு நீதிமன்ற நடவடிக்கையாகக் காணப்படுவதனால், மேற்படி நடவடிக்கைகளை ஒளிப்பதிவு செய்வது தடை செய்யப்படுகின்றது. ஆகவே, இந்நடவடிக்கை நடைபெறும் வேளையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான வளாகத்திற்குள் ஊடகவியலாளர்கள் எவரும் ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.

மேற்படி ஒழுங்குவிதிகளை மீறும் நபர்களுக்கு எதிராக, நீதிமன்றினால் உரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையின் பிரகாரமே சான்று பொருட்களை மக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்பட்டிருந்தது.