Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Nadia Dyson
படக்குறிப்பு, ஆன்டிகுவா நாட்டின் குடியுரிமையை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறதுஎழுதியவர், ஜெம்மா ஹேண்டி பதவி, வணிக நிருபர்9 நிமிடங்களுக்கு முன்னர்
கிழக்கு கரீபியன் தீவுகளில் ஆடம்பரமாக நிம்மதியாக வாழ்வதுடன், அங்கு சொந்தமாக வீடு வாங்கலாம். அங்கு சொத்து வாங்குபவர்கள் அந்நாட்டின் பாஸ்போர்ட்டையும் பெறலாம். அமெரிக்காவில் நிலவும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மையின் காரணமாக இங்கு சொத்து வாங்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ், டொமினிகா, கிரெனடா, செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா என ஐந்து தீவு நாடுகள் வெவ்வேறு முறைகள் மூலம் குடியுரிமையை வழங்குகின்றன.
இந்த நாடுகளில் $200,000 (£145,000) முதலீடு செய்தால் முதலீட்டு வழி குடியுரிமை (Citizenship by investment) கிடைக்கிறது.
அங்கே ஒருவர் வீடு வாங்கினால், பாஸ்போர்ட்டும் கிடைக்கும். இந்த பாஸ்போர்ட் வைத்திருப்பவர் ஐரோப்பாவின் ஷெங்கன் பகுதி மற்றும் பிரிட்டன் உட்பட 150 நாடுகளுக்கு, விசா இல்லாமலேயே பயணிக்கலாம்.
பணக்காரர்களுக்கு நன்மை பயக்கும் குடியுரிமை
இந்த நாடுகளில் முதலீடு செய்வது செல்வந்தர்களுக்கு கவர்ச்சிகரமாக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. இந்தத் தீவுகள் மூலதன ஆதாயங்கள் மற்றும் பரம்பரை சொத்துகளுக்கு வரி விதிப்பதில்லை. சில சந்தர்ப்பங்களில், வருமானத்திற்கும் வரி விதிக்கப்படுவதில்லை. எனவே, இந்த சலுகைகள் அனைத்தும் முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு இயல்பாகவே மிகப்பெரிய ஈர்ப்பாக உள்ளன.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதே நேரத்தில், இந்த ஐந்து நாடுகளும் அங்கு சொத்து வாங்குபவர்கள் தங்கள் தற்போதைய குடியுரிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும் அனுமதிக்கின்றன.
ஆன்டிகுவாவில், வீடு வாங்க விரும்புபவர்களின் தேவை அதிகமாக இருப்பதால், தேவைகளைப் பூர்த்தி செய்ய எஸ்டேட் முகவர்கள் சிரமப்படுகிறார்கள் என்று சொகுசு இடத்தை வைத்திருக்கும் நாடியா டைசன் கூறுகிறார்.
“இங்கு சொத்து வாங்கு விரும்புபவர்களில் 70 சதவீதம் பேர் வரை குடியுரிமை பெற விரும்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஐந்து தீவு நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்லும் வசதியை அனுபவிக்கிறார்கள்”அரசியலைப் பற்றி அவர்களுடன் நாங்கள் விவாதிப்பதில்லை என்றாலும், மக்கள் இங்கு முதலீடு செய்ய அமெரிக்காவில் தற்போது நிலவும் நிலையற்ற அரசியல் சூழ்நிலையும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது” என்று நாடியா கூறினார்.
“கடந்த வருடம் இந்த நேரத்தில், இங்கு சொத்து வாங்குபவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை முறையே முக்கியமானதாக இருந்தது. அப்போது குடியுரிமைக்காக இங்கு சொத்துக்களில் முதலீடு செய்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது.”
“ஆனால் இப்போது அவர்கள் அனைவரும், ‘வீட்டுடன் குடியுரிமை வேண்டும்’ என்று கூறுகிறார்கள். நாங்கள் இதற்கு முன்பு இவ்வளவு வீடுகளை விற்றதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
ஆன்டிகுவாவின் கொள்கை வசிப்பிடத்தை கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், அங்கு வீடு வாங்குபவர்களில் பலர் நிரந்தரமாகவே அங்கு குடியேறுவது குறித்து ஆலோசித்து வருவதாக நாடியா டைசன் கூறுகிறார்.
“சிலர் ஏற்கனவே இடம்பெயர்ந்துவிட்டனர்” என்று அவர் மேலும் கூறுகிறார்.
கரீபியன் நாடுகளில் குடியுரிமை பெறும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஆண்டு கரீபியன் நாடுகளில் முதலீட்டு வழி குடியுரிமை பெறுவதற்கான விண்ணப்பங்களில் அமெரிக்க குடிமக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததாக, முதலீடு மூலம் குடியேற்றத்தில் நிபுணத்துவம் பெற்ற இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தவிர, யுக்ரேன், துருக்கி, நைஜீரியா மற்றும் சீனா ஆகிய நாட்டு குடியுரிமை வைத்திருப்பவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களில் முன்னணியில் இருப்பதாக, உலகம் முழுவதும் அலுவலகங்களைக் கொண்ட இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிலிருந்து, கரீபியன் நாடுகளில் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதற்கான மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் 12 சதவீத அதிகரித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை கேட்பவர்களில் அமெரிக்கர்களின் எண்ணிக்கையே அதிகம்
ஹென்லி & பார்ட்னர்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டொமினிக் வோலெக்கின் கூற்றுப்படி, துப்பாக்கி வன்முறை முதல் யூத எதிர்ப்பு வரை அனைத்தும் அமெரிக்கர்களிடையே பதற்றத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்குகின்றன.
“சுமார் 10-15 சதவீத மக்கள் உண்மையில் இடம்பெயர்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்பட்டுள்ள கவலைக்கு இந்த குடியுரிமை ஒரு காப்பீடு போல இருக்கும். மற்றொரு குடியுரிமையைப் பெறுவது என்பது அவர்களுக்கான நல்ல மாற்றுத் திட்டமாக இருக்கும்” என்று டொமினிக் கூறுகிறார்.
கரீபியன் பாஸ்போர்ட்டுகள் பயணத்தை எளிதானதாகவும் வசதியானதாகவும் மாற்றுகின்றன என்பதால் வணிகர்கள் இதனை பெற விரும்புவதாக டொமினிக் வோலெக் கூறுகிறார். “அமெரிக்காவில் உள்ள சிலர், அரசியல் ரீதியாக சலுகைகளை பெற்றுத் தரக் கூடிய சுலபமான இந்த பாஸ்போர்ட்டில் பயணிக்க விரும்புகிறார்கள்.”
கொரோனா நெருக்கடிக்கு முன்பு, ஹென்லி & பார்ட்னர்ஸுக்கு அமெரிக்கா ‘முன்னுரிமை’ நாடாக இருந்ததில்லை என்று டொமினிக் வோலெக் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கரீபியன் தீவுகளில் குடியேற விரும்பும் மக்கள்
தனியார் ஜெட் விமானங்களில் சுதந்திரமாகப் பயணம் செய்த செல்வந்தர்களுக்கு கோவிட் சமயத்தில் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் “மிகப்பெரிய அதிர்ச்சியாக” இருந்தன. எனவே, கரீபியன் நாடுகளில் ‘முதலீட்டு வழி குடியுரிமை’ பெறுவதற்கான விண்ணப்பங்கள் முதன்முறையாக அதிகரித்தது.
பின்னர், 2020 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் நடந்த அமெரிக்கத் தேர்தல்களுக்குப் பிறகு, மக்கள் இந்த நாடுகளில் குடியுரிமை பெறுவதில் ஆர்வம் மீண்டும் அதிகரித்தது.
“டொனால்ட் டிரம்பை விரும்பாத ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் உள்ளனர். அதே நேரத்தில், ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களையோ அல்லது ஆதரவாளர்களையோ விரும்பாத குடியரசுக் கட்சியின் உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் உள்ளனர்” என்று டொமினிக் வோலெக் கூறுகிறார்.
“கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் எங்கள் தொழில் கணிசமாக விரிவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் எங்கள் நிறுவனத்திற்கு அலுவலகமே கிடையாது. இப்போது, இரண்டு ஆண்டுகளில், அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் 8 அலுவலகங்களைத் திறந்துள்ளோம். எதிர்வரும் மாதங்களில் மேலும் இரண்டு முதல் மூன்று அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன” என்று அவர் மேலும் கூறுகிறார்.
கனடாவின் ஹாலிஃபாக்ஸில் வசிக்கும் ராபர்ட் டெய்லர், அவர் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார். அவர் ஆன்டிகுவாவில் ஒரு சொத்தை வாங்கியுள்ளார்.
ரியல் எஸ்டேட் வரம்புத்தொகை $300,000 ஆக உயர்த்தப்படுவதற்கு சற்று முன்பு, அதாவது கடந்த கோடையில் அவர் $200,000 முதலீடு செய்தார்.
இந்த கரீபியன் நாடுகளின் குடிமகனாக மாறுவது, வசிப்பிடக் கட்டுப்பாடுகளை தகர்ப்பதுடன், வணிக வாய்ப்புகளுக்கான சுதந்திரத்தையும் அளிப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.
“ஆன்டிகுவாவில் அழகான கடற்கரைகள் உள்ளன, அங்குள்ள மக்கள் மிகவும் நட்பானவர்கள் என்று தோன்றியதால் அதன் குடியுரிமையைப் பெற்றேன். அங்குள்ள தட்பவெட்பமும் சிறந்ததாக இருப்பதால் எனது வாழ்நாள் முழுவதும் அங்கு செலவிட ஏற்றதாக இருக்கும்” என்று ராபர்ட் கூறுகிறார்.
குடியுரிமைக் கொள்கை குறித்த சர்ச்சைகள் இருந்தபோதிலும், இந்தக் குடியுரிமைக் கொள்கைகள் அல்லது திட்டங்கள் தொடர்பாக பல கேள்விகளும் உள்ளன. நாட்டின் தள்ளாடும் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, 2012ஆம் ஆண்டில் அப்போதைய ஆன்டிகுவா அரசாங்கம் ‘முதலீட்டு வழி குடியுரிமை’ வழங்குவதை முன்மொழிந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குடியுரிமை-மூலதனக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத கரீபியன் நாடுகளின் தலைவர்கள் அதை விமர்சிக்கத் தொடங்கினர்அரசின் இந்தத் திட்டத்தை எதிர்த்த மக்கள், வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தியதாக ஆண்டிகுவா அரசின் பிரதிநிதிகள் சபையின் முன்னாள் சபாநாயகர் கிசெல் ஐசக் கூறுகிறார்.
“‘முதலீட்டு வழி குடியுரிமைக்கு எதிராக ஒரு தேசிய உணர்வு இருந்தது. எங்களது அடையாளத்தை விற்பதைப் போல் இருப்பதாக மக்கள் உணர்ந்தார்கள். எங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்களுக்கு எங்கள் நாட்டின் குடியுரிமை விற்கப்பட்டது,” என்று அவர் கூறுகிறார்.
இந்தக் குடியுரிமை-மூலதனக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத கரீபியன் நாடுகளின் தலைவர்கள் அதை விமர்சிக்கத் தொடங்கினர்.
‘முதலீட்டுவழி குடியுரிமை’ திட்டத்தை விமர்சித்தவர்களில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் பிரதமர் ரால்ப் கோன்சால்வ்ஸ் அடங்குவார். குடியுரிமை என்பது “விற்பனைக்குக் கிடைக்கும் பொருளாக” இருக்கக் கூடாது என்று அவர் முன்பு கூறியிருந்தார்.
குடியுரிமைக்கான அளவுகோலை இவ்வாறு தளர்த்துவதால், குற்றவாளிகள் தங்கள் நாட்டு எல்லைகளைக் கடக்க உதவும் என்ற அச்சம் சர்வதேச சமூகத்தில் உள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் கவலை
‘முதலீட்டு வழி குடியுரிமை’வழங்கும் கரீபியன் நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்வதற்கான மதிப்புமிக்க வாய்ப்பை ரத்து செய்யப் போவதாக ஐரோப்பிய ஒன்றியம் அச்சுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் வரிகளைத் தவிர்ப்பதற்கும் நிதிக் குற்றங்களைச் செய்வதற்கும் இதுபோன்ற குடியேற்ற கொள்கைகள் பயன்படுத்தப்படும் என்ற சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமெரிக்கா ஏற்கனவே கவலை தெரிவித்துள்ளது.
இந்த ஐந்து கரீபியன் நாடுகளின் குடியுரிமைத் திட்டங்களை “அவதானித்து வருகிறோம்” என்று ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். 2022 முதல் இந்த நாடுகளில் தொடர்புடைய அதிகாரிகளுடன் இது குறித்து அவர்கள் விவாதித்து வருகின்றனர்.
முதலீட்டு வழி குடியுரிமை பெறுவது என்பது, “ஐரோப்பிய நாடுகளால் இந்த நாடுகளுக்கு வழங்கப்பட்ட விசா இல்லாத அணுகலை துஷ்பிரயோகம் செய்கிறதா மற்றும் இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துகிறதா” என்பதை தீர்மானிப்பதற்காக தற்போது மதிப்பீடு நடந்து வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிறிய கரீபியன் நாடுகள் சுற்றுலாவைச் சார்ந்துள்ளனஇந்த நாடுகள் செய்துள்ள சீர்திருத்தங்களை அவற்றின் மதிப்பீட்டைப் பாதிக்கும் என்று ஐரோப்பிய ஆணையம் கூறியுள்ளது.
குடியுரிமை வழங்கும் போது விண்ணப்பங்களை போதுமான அளவு ஆய்வு செய்யவில்லை என்று கூறப்படுவதற்கு இந்த ஐந்து கரீபியன் நாடுகளும் வலுவாக பதிலளித்துள்ளன.
தனது நாட்டின் குடியுரிமை திட்டத்தை “நியாயமானது மற்றும் வெளிப்படையானது” என்று டொமினிகா பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெரிட் கூறுகிறார். திட்டத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த அதிகாரிகள் கடுமையாக உழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1993ஆம் ஆண்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டதிலிருந்து, பாஸ்போர்ட் விற்பனை மூலம் 1 பில்லியன் டாலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது, இது அதிநவீன மருத்துவமனைகள் உட்பட முக்கியமான உள்கட்டமைப்புகளுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
செயின்ட் லூசியா பிரதமர் பிலிப் ஜே. பியர் கூறுகையில், முதலீட்டு வழி குடியுரிமை கொள்கை, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, தனது நாடு மிக உயர்ந்த பாதுகாப்பு தர நிலைகளை கடைபிடிப்பதாக கூறுகிறார்.
ஐந்து கரீபியன் நாடுகளுக்கு என்ன லாபம்?
மிகக் குறைந்த வளங்களைக் கொண்டுள்ள இந்த சிறிய கரீபியன் நாடுகள் சுற்றுலாவையே அதிகம் சார்ந்துள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த நாடுகள் வருவாயை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், உலகின் வல்லரசுகளுடன் இணக்கமாக இருந்து அவற்றை திருப்திப்படுத்துவதற்கும் இடையில் மிகவும் நுட்பமான சமநிலையை பராமரிக்க வேண்டும்.
ஏப்ரல் மாதம் நடந்த பிராந்திய தொழில்துறை மாநாட்டில், முதலீட்டு வழி குடியுரிமை திட்டம் முக்கிய விஷயமாக விவரிக்கப்பட்டது. திரட்டப்பட்ட நிதியானது, இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகு சுத்தம் செய்யும் இயக்கங்கள் முதல் தேசிய ஓய்வூதியத் திட்டம் வரை அனைத்திற்கும் பயன்படுத்தப்பட்டது.
‘முதலீட்டு வழி குடியுரிமை’ திட்டத்தின் மூலம் கடந்த பத்தாண்டுகளில் திரட்டப்பட்ட பணம் தனது நாட்டை திவால் நிலையிலிருந்து மீட்டெடுத்ததாக ஆன்டிகுவா பிரதமர் காஸ்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
இந்த கரீபியன் நாடுகளில் முதலீடு செய்து குடியுரிமை பெற சொத்து அல்லது வீடு வாங்குவதைத் தவிர, தேசிய மேம்பாட்டு நிதிக்கு நன்கொடை அளிப்பது மற்றும் சில வழிகள் உள்ளன. அதாவது குடியுரிமையை பிற நாட்டினருக்கு வழங்க, இந்த நாடுகள் பல்வேறு அளவுகோல்களை வைத்துள்ளன.
‘முதலீட்டு வழி குடியுரிமை’ பெற டொமினிகாவில் விண்ணப்பிக்கும் ஒருவர் $200,000 முதலீடு செய்யவேண்டும் என்றால், டொமினிகா மற்றும் செயின்ட் கிட்ஸில் விண்ணப்பதாரர் மற்றும் அவரைச் சார்ந்த மூன்று பேருக்கு $250,000 வரை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
ஆன்டிகுவாவில், முதலீட்டாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் பல்கலைக் கழகத்திற்கு(University of the West Indies) $260,000 நன்கொடை அளிக்கும் விருப்பத் தெரிவும் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அமெரிக்காவில் நிலவும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரமின்மை கரீபியன் தீவுகளை நோக்கிய ஆர்வத்தை உருவாக்கி வருகிறதுசர்வதேச அழுத்தத்திற்கு நடுவே, முதலீட்டு வழி குடியுரிமை வழங்கும் போது மேற்பார்வை மற்றும் சரிபார்ப்பை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த கரீபியன் நாடுகள் உறுதிபூண்டுள்ளன.
தரநிலைகளை நிர்ணயிப்பதற்கும், செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கும், விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் பிராந்திய ஒழுங்குமுறை அதிகாரிகளை நிறுவுவதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.
கூடுதலாக, இந்த கரீபியன் நாடுகள் 6 கொள்கைகளில் அமெரிக்காவுடன் உடன்பட்டுள்ளன.
குடியுரிமை வழங்குவதற்கு முன் முறையான கவனத்துடன் செயல்படுதல், வழக்கமான தணிக்கைகளை நடத்துதல், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் நேர்காணல்களை கட்டாயமாக்குதல் மற்றும் ஒரு நாட்டால் குடியுரிமை மறுக்கப்பட்ட பிறகு மற்றொரு நாட்டில் விண்ணப்பிக்க அனுமதிப்பது போன்ற சட்டத்தில் உள்ள ஓட்டைகளை நீக்குதல் ஆகியவை இந்த உடன்பாட்டில் அடங்கும்.
தற்போது, இந்த கரீபியன் நாடுகள் பாஸ்போர்ட் விற்பனை அல்லது முதலீட்டு வழி குடியுரிமை வழங்குவதன் மூலம் பெறும் வருமானம் அவர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10-30 சதவீதத்திற்கு சமம் என்பதும், இது அவர்களின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செயின்ட் கிட்ஸைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஆண்ட்ரே ஹுய், இது தனது நாட்டின் குடியுரிமை-மூலதனத் திட்டத்திற்கு “பொதுவாக நல்ல ஆதரவை” அளித்துள்ளது என்று கூறுகிறார்.
“மக்கள் தங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு இந்தத் திட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை உணர்ந்து வருகின்றனர். இந்தத் திட்டத்திலிருந்து பெறப்பட்ட பணத்தில் அரசாங்கம் செய்த பணிகளையும் மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு