செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து புத்தக பை , சிறிய பொம்மை , பால் போச்சி உள்ளிட்ட 46 சான்று பொருட்கள் இதுவரையில் மீட்கப்பட்டு, அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளது. 

செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும்  “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது, இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்நிலையில் செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையுடன் 31 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதன் போது, புதைகுழிகளில் இருந்து புத்தக பை, பொம்மை , சிறுவர்களுடைய காலணிகள் , வளையல்கள் , பால் போச்சி உள்ளிட்ட 46 சான்று பொருட்கள் மீட்கப்பட்டு , அவை சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை இதுவரையில் 101 எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினத்துடன் 95 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.