வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் புதிய தாதியர்களை நியமித்து இந்த குறைகள் நிவர்த்தி செய்யப்படுமெனவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். 

நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

இப்புதிய வெளிநோயாளர் பிரிவில் மருந்தகம், தடுப்பூசி அறை, பற்சிகிச்சைப் பிரிவு, தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை உள்ளன.மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு,முதன்மை பராமரிப்பு பிரிவு உள்ளிட்ட சுகாதார வசதிகளும் இங்குள்ளன.

இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.

இதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருகிறது. மக்களை மையமாகக் கொண்டதாகவே சுகாதார சேவை இருக்க வேண்டும்.

தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டதாகவே உள்ளது.மருத்துவ சேவைகளைப் பெறுவதற்காக வெகுதூரம் செல்வதற்கு மக்கள் பழகிவிட்டனர். இந்த அணுகுமுறையே யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு அதிகளாவான நோயாளர்களை வர வைத்துள்ளது.

தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும். இந்தக் கட்டுமானப் பணிகளை மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிப்பதற்கு கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள். 

மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், ஆம்பியுலன்ஸ்கள் என்பவற்றின் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சு பலவீனமாக உள்ளது.

எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர்காவு வண்டி உள்ளிட்ட வாகனங்களை வழங்கும்போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.