Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கொல்கத்தா சட்டக் கல்லூரியில் என்ன நடந்தது? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விடை தெரியாத கேள்விகள்
பட மூலாதாரம், Samir Jana/Hindustan Times via Getty Images
எழுதியவர், பிரபாகர் மணி திவாரி பதவி, பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர்
மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்திருக்கும் ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளநிலை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு ஓராண்டு கூட நிறைவடையவில்லை. இந்த சூழலில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது, மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வழக்கில் நிலவி வரும் பல்வேறு சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் காவல்துறையினர் பதில் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவப் பரிசோதனையில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்தின் போது, அங்கே காவலாளியாக பணியில் இருந்த 55 வயதான பினாகி பானார்ஜியையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் கொடுத்த வாக்குமூலங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறை ஆய்வுக்குட்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, குற்றம் சுமத்தப்பட்ட நபர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டது. அவர் திரிணாமுல் காங்கிரஸ் சத்ர பரிஷத்தைச் (திரிணாமுல் காங்கிரஸின் மாணவர் அணி) சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அதே கல்லூரியில் இருந்தது மற்றும் மாணவர் அணியில் செயல்பட்டு வந்த காரணங்களால் குற்றம் சுமத்தப்பட்டவர் பாதிப்புக்கு ஆளான மாணவிக்கு தெரிந்தவர் என்று கூறப்பட்டது. ஆனால் மாணவியின் குடும்பத்தினருக்கு, குற்றஞ்சாட்டப்பட்டவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.
இந்த வழக்கில் கல்லூரி வளாக காவலாளியுடன் 2 மாணவர்களையும், ஒரு முன்னாள் மாணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மற்றொரு புறம், அரசியல் மட்டத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.
பாஜக, இந்த சம்பவத்தை ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தோடு தொடர்புபடுத்தி, அம்மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. அங்குள்ள கல்வி நிறுவனங்களில் திரிணாமுல் காங்கிரஸின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் பாஜக குற்றம் சாட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியும் இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸை கடுமையாக சாடியுள்ளது.
பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய திரிணாமுல் காங்கிரஸ், பாஜக ஆளும் மாநிலங்களில் நிலவும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, கொல்கத்தாவில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்ற பெண்கள் காவல்துறை விசாரணை
அரசியல் பின்புலம் இருக்கின்ற காரணத்தால் தான் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜித் மீது காவல்துறையில் முன்னதாகவே புகார் அளிக்கவில்லையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து யாருக்காவது முன்பே தெரியுமா என்பதை அறிய, கல்லூரியில் பணியாற்றும் இதர பணியாளர்களிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
முக்கிய சாட்சியமான காவலாளியையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
“காவலாளி அவருடைய அறையில் இருந்து வெளியேற்றப்பட்டு, பிரதான நுழைவாயில் மூடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் ஏன் அவர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளிக்கவில்லை? மனோஜித்திற்கும் அவரின் கூட்டாளிகளுக்கும் உள்ள செல்வாக்கு காரணமாக அவர் அதனை செய்யவில்லையா?” என்ற கேள்வியையும் காவல்துறையினர் எழுப்புகின்றனர்.
மனோஜித் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் இருக்கின்ற சூழலில் ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என்பதையும், அவருக்கு எப்படி வேலை கிடைத்தது என்பது குறித்தும், அதன் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை, கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா, கூடுதல் காவல்துறை ஆணையர் சந்தோஷ் பாண்டே, துணை ஆணையர் (தெற்கு) விதிஷா கலிதா உள்ளிட்ட பல காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, இந்த விவகாரம் அரசியல் மட்டத்தில் தீவிரமான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது! காவல்துறையினரிடம் மாணவர்கள் கூறியது என்ன?
பாதிக்கப்பட்ட மாணவி, காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மாணவியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அம்மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, குற்றஞ்சுமத்தப்பட்ட நபருக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள தொடர்பு விவாதத்திற்கு ஆளாகியுள்ளது.
அவர் அக்கட்சி தலைவர்களுடன் முன்பு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவர் மாணவர் அணியில் உறுப்பினராக இருந்த காரணத்தால் அவர் தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துள்ளார் என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணித் தலைவர் திரிநாங்கூர் பட்டாச்சார்யா பேசும் போது, “குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மாணவர் அணியில் இருந்தார் என்பதை கட்சி மறுக்கவில்லை. அவர் 2019-ஆம் ஆண்டு மாணவர் அணியில் இருந்தார். நாங்கள் யாரும் ஆரூடம் கூறுபவர்கள் இல்லை. எனவே 2025-ஆம் ஆண்டு அவர் இப்படியாக ஒரு குற்றத்தைச் செய்வார் என்று எங்களுக்கு அன்று தெரியாது,” என்று கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Sanjay Das
படக்குறிப்பு, நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் குற்றஞ்சுமத்தப்பட்ட நபர் குற்றஞ்சாட்டப்பட்ட மனோஜித் மீது எழும் சந்தேகங்கள்
இந்த சூழலில் மனோஜித் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவரத் துவங்கியுள்ளன. அவர் கல்லூரியில் பலரையும் சீண்டும் ஒரு நபராக இருந்துள்ளார் என்றும் அவரை எதிர்த்து கேள்வி கேட்க யாருக்கும் தைரியம் வரவில்லை என்றும் கல்லூரி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். மனோஜித் இந்த கல்லூரியில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளார்.
2007-ஆம் ஆண்டு கல்லூரியில் படிக்க வந்தார் என்று கல்லூரி வட்டாரம் தெரிவிக்கிறது. சில நாட்களிலேயே கல்லூரியை விட்டு வெளியேறிய அவர், 2017-ஆம் ஆண்டு பி.ஏ-எல்.எல்.பி. (BA-LLB) படிக்க வேண்டி கல்லூரியில் மீண்டும் சேர்ந்துள்ளார். 2022-ஆம் ஆண்டு அவர் பட்டம் பெற்றார்.
ஆரம்ப காலகட்டத்தில் அவர் மாணவர் கவுன்சில் நிர்வாகியாக இருந்துள்ளார். சேதப்படுத்துதல் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அந்த பதவியில் இருந்து 2021-ஆம் ஆண்டு அவர் நீக்கப்பட்டார்.
மனோஜித் மீது எத்தனையோ குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், அவர் மீது காவல்துறையில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது.
அக்கல்லூரியில் செயல்பட்டு வரும் திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் கவுன்சில் உறுப்பினர் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு பிபிசியிடம் பேசினார். “மனோஜித்திற்கு கட்சித் தலைவர்களின் ஆதரவு இருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதை விடுங்கள், அவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி கல்லூரியில் தற்காலிக பணி ஒன்றையும் பெற்றுவிட்டார்,” என்று அவர் குறிப்பிடுகிறார்.
“மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வசிக்கும் கொல்கத்தா காளிகாட் பகுதியில் தான் மனோஜித் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களாக அவர் தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து விலகி தனியாக வசித்து வருகிறார். அவருடைய தந்தை கோவில் பூசாரியாக உள்ளார்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ள, ஆர்.ஜி. கர் கல்லூரியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிக் கொள்ளப்பட்ட பெண் மருத்துவரின் தந்தை, பெருநகரங்களில் பெண்களுக்கு எதிராக இப்படி தொடர்ச்சியாக நடைபெறும் சம்பவங்கள் குறித்து கவலை அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்.
“இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டியது அரசின் முக்கிய பணியாகும். குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்,” என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் நடைபெற்ற சம்பவத்திற்குப் பிறகு பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டங்களை நடத்தினார்கள். இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பரஸ்பரம் குற்றம் சுமத்தும் அரசியல் கட்சிகள்
மறுபுறம், அரசியல் கட்சிகள் மற்ற கட்சிகள் மீது குற்றம் சுமத்தி வருகின்றன. வெள்ளிக்கிழமையில் இருந்து இந்த சம்பவத்திற்கு எதிராக பல கட்சி மற்றும் மாணவர்கள் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
“மேற்கு வங்கத்தில் ஒரு நாணயத்தின் இருபுறங்களாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காவல்துறையும் செயல்பட்டு வருகின்றன. அதனால் தான் அக்கட்சி நிர்வாகிகள் யாருக்கும் பயப்படுவதே இல்லை,” என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ஷமிக் பட்டாச்சார்யா கூறுகிறார்.
மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்தார், ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்தைத் தொடர்ந்து ஓராண்டுக்குள் இது போன்ற சம்பவம் நடைபெறுவது பெண்களுக்கு இந்த மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது என்று கூறுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவரணியான எஸ்.எஃப்.ஐ. அமைப்பின் மாநிலச் செயலாளர் தேவஞ்சன் தே, “காளிகாட் நகரின் மோசமான குற்றவாளி மனோஜித் மிஸ்ரா. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தும் அவருக்கு கல்லூரியில் பணி கிடைத்தது எப்படி? அரசியலுக்கும் குற்றத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பை உடனடியாக வெளிக்கொண்டு வர வேண்டும்,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
படக்குறிப்பு, மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவர் சுகந்தா மஜூம்தார் “பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசியலாக்கக் கூடாது. பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அபரஜிதா மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஆர்.ஜி. கர் மருத்துவமனை சம்பவத்திற்கு பிறகு இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் அது இன்னும் சட்டமாக்கப்படவில்லை. ஒப்புதல் விரைவில் வழங்கப்பட வேண்டும்,” என்று மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான சஷி பஞ்சா கொல்கத்தாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
“குஜராத்தில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டால் அவர்களை மாலை அணிவித்து வரவேற்கின்றனர். வங்கத்தில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எந்த கட்சிப் பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றும் அவர் கூறினார்.
“நடைபெற்ற சம்பவத்தை கடுமையாக கண்டிக்கிறோம். கொல்கத்தா காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரையும் கைது செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு