Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழக பள்ளிகளில் ‘வாட்டர்பெல் திட்டம்’ எவ்வாறு அமலாகும்? மாணவர்கள் தண்ணீர் குடிப்பது ஏன் அவசியம்?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி செய்தியாளர்28 ஜூன் 2025, 10:35 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
கோவையிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர் அவர். கடந்த மாதத்தில் விடுமுறை நாளாக இருந்த சனிக்கிழமையன்று காலை 6 மணியளவில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்றார். காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்தார். மிகவும் சோர்வாக இருந்த அந்த மாணவன், மறுநாள் காலையில் எழவேயில்லை. மயக்கமாக இருந்த அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாணவன் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகக் கூறிய மருத்துவர்கள், சிறுவனின் உடலில் நீர்ச்சத்து மிகவும் குறைந்திருந்ததே இதற்குக் காரணமென்று கூறி சிகிச்சை மேற்கொண்டனர். இரு வார சிகிச்சைக்குப் பின், மாணவன் நலம் பெற்று வீடு திரும்பினார்.
மாணவனின் பெற்றோரிடம் பிபிசி தமிழ் பேசிய போது, காலையிலிருந்து மாலை வரை தண்ணீரே குடிக்காமல் விளையாடியதே இதற்குக் காரணமென்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தனர். பொதுவாகவே அந்த மாணவன் மிகவும் குறைவாகவே தண்ணீர் குடித்து வந்ததாக மாணவனின் பெற்றோர் கூறினர்.
இந்த நிகழ்வு, பள்ளி மாணவர்கள் போதிய அளவு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்துகிறது. இதற்காகவே, வெளிநாடுகள் பலவற்றிலும் உள்ள ‘வாட்டர் பெல்’ திட்டத்தை இந்தியாவில் பல மாநிலங்கள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக பள்ளி கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
‘வாட்டர் பெல்’ தமிழ்நாட்டில் எவ்வாறு செயல்படுத்தப்படும்?
பட மூலாதாரம், Getty Images
வாட்டர் பெல் திட்டம் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி,
அனைத்து மாணவர்களும் தண்ணீருடனோ அல்லது தண்ணீர் இல்லாமலோ பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டு வர அறிவுறுத்தப்பட வேண்டும்.காலைநேர கூட்டத்தின் போது தண்ணீர் குடிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.தண்ணீர் குடிப்பதற்காக அடிக்கப்படும் பெல்லானது, வழக்கத்தை விட வித்தியாசமானதாக மாணவர்களுக்கு தண்ணீர் குடிப்பதை அறிவுறுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்த பெல் சத்தம் கேட்டதும் மாணவர்கள் அவர்களின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.வாட்டர் பெல்லுக்கான நேரமானது காலை 11 மணி , பகல் 1 மணி, பிற்பகல் 3 மணி என பள்ளிகளின் வசதிக்கேற்ப இருக்கலாம்.இந்த நேரத்தில் மாணவர்கள் வகுப்பை விட்டு வெளியேற அனுமதிக்காமல், வகுப்புச் சூழல் பாதிக்காமலும் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஆசிரியர்கள் அனுமதிக்க வேண்டும் Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
தண்ணீர் குடிக்க அனுமதிப்பதும் தனிமனித உரிமையும்!
பட மூலாதாரம், Dr.Srinivasan
படக்குறிப்பு, மருத்துவர் சீனிவாசன், குழந்தைகள் சிகிச்சை நிபுணர்பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு தண்ணீர் குடிப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன்.
”பள்ளிக் குழந்தைகள் நிறைய விளையாடுவதால் வியர்வை அதிகமாக வெளியேறும். அதனால் மற்றவர்களை விட அவர்கள்தான் அதிகளவில் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்காத பட்சத்தில் நீர்ச்சத்து இழப்புடன் உடல் சோர்வு, மனச்சோர்வு ஏற்படும். கவனமின்மை அதிகரிக்கும். அடிக்கடி நீர்ச்சத்து குறையும் போது, சிறுநீர் தொற்று வரும். பதின்பருவத்தினருக்கு முகப்பருக்கள் தோன்றும்.” என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.
இன்றைய காலகட்டத்தில், துரித உணவு முறைகளாலும், தண்ணீர் தேவையான அளவுக்குக் குடிக்காத காரணத்தாலும் ஏராளமான குழந்தைகள், மலச்சிக்கலை சந்திப்பதாக கூறும் மருத்துவர் சீனிவாசன், நமது உடலில் ஏற்கெனவே உள்ள நீர்ச்சத்தைப் பராமரிக்கவும், உடல் செயல்பாட்டுக்கேற்பவும் அனைவரும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டுமென்கிறார்.
பட மூலாதாரம், Dr.Duraikannan
படக்குறிப்பு, மருத்துவர் துரைக்கண்ணன், ஊட்டச்சத்து நிபுணர்பொதுவாக நீரிழப்பு (Dehydration) அதிக வியர்வை, விளையாட்டு போன்ற அதிகமான உடல் செயல்பாடு (Activities), அதிக வெப்பம் ஆகியவற்றால் ஏற்படும் என்று விளக்கும் குழந்தைகள் நலம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், நீரிழப்பால் உடலின் சமநிலை பாதிக்கும் (electrolyte imbalance) என்கிறார். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால்தான் எல்லா வயதினருக்குமே மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.
”குழந்தைகளுக்கு முக்கியமாக பதின் பருவத்தினருக்கு உயரம், எடை இரண்டுமே வேகமாக அதிகரிக்கும் என்பதால் உடலுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படும். அதற்கு நீர்ச்சத்து மிக முக்கியம். குழந்தையின் உடல் மற்றும் வளர்ச்சிக்கேற்ப தாகம் ஏற்படும். அதற்குரிய அளவில் கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். சமவெளிகளில் ஒவ்வொரு மாணவனும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திலிருந்து அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு ஒரு முறையாவது தண்ணீர் குடிக்க வேண்டும்.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன்.
நீர்ச்சத்து குறைவதால் வரும் பாதிப்புகள்
பட மூலாதாரம், Getty Images
உடலில் நீர்ச்சத்து குறையும் போது, நமது உடலின் இயக்கத்தில் முக்கியப் பங்காற்றும் எலக்ட்ரோலைட் (Electrolytes) சமநிலை இல்லாமல் போக வாய்ப்புள்ளது என்று கூறும் மருத்துவர் சீனிவாசன், அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையும், சில நேரங்களில் ரத்தப்போக்கு (Bleeding) ஏற்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கிறார். உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் குறையுமென்றும் அவர் எச்சரிக்கிறார்.
”ஒருவருக்கு நீர்ச்சத்து முற்றிலும் குறையும் பட்சத்தில் சிறுநீரகம் செயல்பாட்டை நிறுத்திவிடும். தண்ணீர் குடிக்காமலே வெகுநேரம் விளையாடும் போது தசைப்பிடிப்பு (cramps) ஏற்படும். தொடர்ச்சியாக இந்த பாதிப்பு ஏற்படும்போது, மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ வைப்பது மிகவும் நல்ல திட்டம் என்பதோடு மிகவும் அவசியமானதும் கூட.” என்கிறார் மருத்துவர் சீனிவாசன்.
ஒரே வயதுடைய மாணவர்களிடையே உயரம், எடை போன்றவற்றில் நிறைய மாறுபாடு இருக்கும் நிலையில், ‘எல்லோரும் சராசரியாக இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்ற கருத்து சரியானதுதானா என்ற கேள்வியும் பலரிடமும் எழுப்பப்படுகிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன், சராசரியாக ஒவ்வொருவரும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டுமென்றால், மாணவர்களின் செயல்பாட்டுக்கேற்ப இந்த அளவு மாறுபடும் என்றார். உயரம், எடையை விட பாடம் படிப்பது, பாட்டுப்பாடுவது, விளையாடுவது என அந்தந்த நேரத்தின் செயல்பாட்டின் அளவைக் கணக்கில் கொண்டே தண்ணீர் குடிக்க வேண்டுமென்பது அவரின் கருத்து. இந்த அளவு குறையும்போது, அவர்களால் பாடங்களைச் சரியாகக் கவனிக்க முடியாது; செயல்பாடுகளிலும் சுணக்கம் ஏற்படும் என்கிறார் அவர்.
கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப்பகுதிகளிலும், ஒரு நாளுக்கு இதே அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகமும் பலருக்கு எழுகிறது. இதைப் பற்றி விளக்கும் மருத்துவர் சீனிவாசன், மலைப்பகுதியில் வியர்வை வராது என்பதால் அங்கே தண்ணீரின் தேவை குறைவாக இருக்கும் என்கிறார். அதேநேரத்தில் அங்கேயும் உடல் உழைப்பு இருப்பவர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார். ஆனால் மலைப்பகுதிகளில் ‘வாட்டர் பெல்’ வைத்து, தண்ணீர் குடிக்க நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் துரைக்கண்ணன்.
”எங்கெங்கே காற்றுப்போக்கு குறைவாயிருக்கிறதோ, வெப்பம் அதிகமாகியிருக்கிறதோ அங்கெல்லாம் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு தளத்திலும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. ஆனால் அரசுப் பள்ளிகளில் இந்த வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.” என்கிறார் அவர்.
”சிறுநீர் கழிக்கவும் அனுமதி அளிப்பது அவசியம்”
பட மூலாதாரம், Getty Images
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ வைப்பது நல்ல திட்டம் என்றாலும், தண்ணீர் குடிக்க அனுமதிக்கும் அதே நேரத்தில் சிறுநீர் கழிக்கவும் போதிய கால இடைவெளியில் அவகாசம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் சீனிவாசன். அதற்கேற்ப கழிப்பறை வசதியையும், சுகாதாரத்தையும் பள்ளி நிர்வாகங்கள் பேணவேண்டியது அவசியம் என்கிறார் அவர்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மருத்துவர் சீனிவாசன், ”பள்ளிக்குழந்தைகளை தண்ணீர் குடிக்க அனுமதித்தால் மட்டும் போதாது. சிறுநீர் கழிக்க அனுமதி கேட்டால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்றே பல குழந்தைகள் தண்ணீர் குடிப்பதில்லை. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள். பெரும்பாலான மாணவிகள், பள்ளிகளில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்கும் பொருட்டே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கின்றனர். இதனால் அதிகளவில் சிறுநீர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு குழந்தையும் ஒரு நாளுக்கு 5 அல்லது 6 முறை சிறுநீர் கழிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.” என்கிறார்.
“குளிர் பானங்கள் தண்ணீருக்கு மாற்று அல்ல”
பட மூலாதாரம், Getty Images
தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்கள் (aerated drinks), உற்சாக பானங்கள் குடிப்பது கூடுதல் ஆபத்துகளை விளைவிக்கும் என்கிறார் மருத்துவர் துரைக்கண்ணன்.
”மாணவர்கள் இதுபோன்ற பானங்களை தொடர்ந்து குடிக்கும்போது, முதலில் உடல் பருமன் (obesity) ஏற்படும். அதன் தொடர்ச்சியாக சிறுவயதிலேயே நீரிழிவு பாதிப்பும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதனால் தாகத்துக்கு எதையாவது குடிக்க வேண்டுமென்று இத்தகைய பானங்களைக் குடிக்காமல் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என 3 தரப்பினருக்கும் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்,” என்கிறார் துரைக்கண்ணன்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். தமிழகத்திலுள்ள 55 ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 63 லட்சம் மாணவர்களும், 14 ஆயிரம் தனியார் பள்ளிகளில் 68 லட்சம் மாணவர்களும் என மொத்தம் ஒரு கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படிப்பதாகத் தகவல் தெரிவிக்கிறார் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார்.
”தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகள் அனைத்திலும் குழந்தைகளின் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்து பலவிதமான அறிவுறுத்தல்களை சங்கம் வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர், தேவையான அளவு கழிப்பிடம் போன்றவை இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தி வருகிறோம்.” என்று நந்த குமார் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு